போலந்து நாட்டு கார் தொழிற்சாலையை கையகப்படுத்த டாடா முயற்சி?
உலக அளவில் கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கவும், வர்த்தகத்தை பரப்பும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஏதுவாக வெளிநாடுகளை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.
சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, போலந்து நாட்டை சேர்ந்த பேப்ரிக்கா சமசோடோ ஓசோபவுச் (எப்.எஸ்.ஓ.,) என்ற கார் தொழிற்சாலையை கையகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முயன்று வருகிறது.
எப்.எஸ்.ஓ., நிறுவனம் உக்ரைன் நாட்டை சேர்ந்த உக்ரைன்ஆட்டோ கார் நிறுவனத்தின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எப்.எஸ்.ஓ., நிறுவனத்தில் உக்ரைன் ஆட்டோவுக்கு 19.9 சதவீத பங்குகளும், போலந்து அரசாங்கத்துக்கு 2.69 சதவீத பங்குகளும் உள்ளன.
எப்.எஸ்.ஓ., கார் தொழிற்சாலையில் தென்கொரியாவை மையமாக கொண்டு செயல்படும் ஜெனரல் மோட்டார்ஸ் தேவு நிறுவனத்தின் செவரோலெட் பிராண்டுக்கான ஏவியோ-2 மாடல் கார்கள் அசெம்பிள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எப்.எஸ்.ஓ., தொழிற்சாலையை கையகப்படுத்துவதன் மூலம், கிழக்கு ஐரோப்பிய கார் சந்தையில் தனது வர்த்தகத்தை எளிதில் விரிவுப்படுத்த முடி்யும் என்று டாடா மோட்டார்ஸ் கருதுகிறது. எனவே, எப்.எஸ்.ஓ., நிறுவனத்தை கையகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு," இதுபோன்ற யூகங்கள் அடிப்படையிலான செய்திகளுக்கு பதில் கூற இயலாது," என்று மறுப்பு தெரிவித்தார். ஆனால், எப்.எஸ்.ஓ., கார் தொழிற்சாலையை கையகப்படுத்தும் முயற்சிகளில் டாடா ஈடுபட்டுள்ளது உண்மையே என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.