புதுவை முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி: ஜெயலலிதா அறிவிப்பு
வரும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் புதுச்சேரி ஏ.எப்.டி. திடலில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் இந்திரா நகர் தொகுதி வேட்பாளர் ரங்கசாமி, உப்பளம் தொகுதி வேட்பாளர் அதிமுக புதுச்சேரி செயலர் அன்பழகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
விலைவாசி உயர்வு மக்களைப் பெரிதும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. மத்தியில் உள்ள காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கையினால் தான் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு காரணமான காங்கிரஸுக்கு வரும் தேர்தலில் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கு விவசாய உற்பத்தியைப் பெருக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் எப்படி திமுக ஆட்சியில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாகியுள்ளதோ அதேபோன்று தான் இங்குள்ள காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்துள்ளது. இங்கு தொழி்ல் வளர்ச்சியில்லை. மாறாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வளர்ச்சியில் தான் குறியாய் இருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி நினைத்த மாதிரி தெரியவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் 2 ஜி ஊழல், காமன்மெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் ஆகியன நடந்துள்ளன. இதில 2ஜி விவகாரத்தில் மட்டும் ரூ. 1.72 லட்சம் கோடி ஊழல் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். புதுச்சேரியிலும் எங்கு பார்த்தாலும் ஊழல்.
புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக காங்கிரஸுடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிக்கிறது. எதிர்கட்சியாக இருக்கும் திமுக ஒழுங்காக இல்லை. ஆனால் அதிமுக தான் எதிர்கட்சியாக செயல்படுகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு, நெல்லுக்கு ஆதரவு விலை, மழைக்கால நிவாரணம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியது அதிமுக தான். புதுச்சேரியில் ஒரு நல்ல திருப்புமுனை ஏற்பட வேண்டும் என்றால் ரங்கசாமியை முதல்வராக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார். இதை கேட்டவுடன் ரங்கசாமி கண்கலங்கினார்.
ஜெ. பேச்சில் உருகிய ரங்கசாமி:
இதையடுத்து ரங்கசாமி பேசியதாவது,
மக்களின் நலனுக்காகப் போராடும் அதிமுக, மக்களுக்காக துவங்கப்பட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது என்றார்.
ஜெயலலிதாவின் வாக்குறுதிகள்:
எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவோம். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவோம். விண்ணைத் தொட்டுள்ள விலைவாசியைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்போம். வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். வேலைவாய்ப்பை பெருக்குவோம். புதுச்சேரிக்கென்று தனி கல்வி வாரியம் அமைப்போம்.
காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறையான ஒதுக்கீடு பெறப்படும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கணினி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் முறைப்படுத்தப்படும்.
புதுச்சேரி சுற்றுலாத் தலமாக உயர்த்தப்படும். ஊனமுற்றோருக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு முறையாக அளிக்கப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்படும். சுய உதவிக்குழு மகளிருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் அளிக்கப்படும். குடிசை வீடுகளை கல்வீடாக்கும் திட்டத்திற்கு ரூ.3 லட்சம் அளிக்கப்படும். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும். தலித் கிறிஸ்தவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகை அளிக்கப்படும். புதுச்சேரிக்கு என்று தனியாக பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்படும் என்றார் ஜெயலலிதா.