போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஆர்.நட்ராஜ், திலகவதி ஓய்வு
சென்னை: தமிழகத்தின் முதல் தமிழ் பெண் டி.ஜி.பி. திலகவதி, டி.ஜி.பி. ஆர். நடராஜ் ஆகியேர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் டி.ஜி.பி. ஆர்.நடராஜ், தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் டி.ஜி.பி. திலகவதி ஆகியோர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதில் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தமிழக காவல் துறையில் 36 ஆண்டுகளும், திலகவதி 34 ஆண்டுகளும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஆர். நட்ராஜ். அவர் சந்தன மரக் கடத்தல் வீரப்பனை பிடிக்க் அமைக்கப்பட்டிருந்த அதிரடிப்படைத் தலைவராக இருந்தார். அப்போது வீரப்பனைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து கொடுத்தார். அவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர், தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஆகிய பதவிகளில் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அவர் தமிழக சிறைத்துறை இயக்குனராக பணியாற்றியபோது கைதிகளை இனி இல்லவாசிகள் என்று தான் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் டி.ஜி.பி.யாகவும் பணியாற்றியுள்ளார்.
நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றபோது தீயணைப்புத்துறை ஊழியர்கள் அவருக்கு மதிய விருந்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் வழி அனுப்பு விழா நடத்தினர்.
திலகவதி ஐபிஎஸ் என்றால் தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் தான் தமிழகத்தின் முதல் தமிழ் பெண் டி.ஜி.பி. எப்படி இந்தியா அளவில் கிரண் பேடி பிரபலமோ அந்த அளவு தமிழகத்தில் பிரபலமானவர் திலகவதி. அவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட. தனது எழுத்துப்பணியும், மக்கள் பணியும் என்றும் தொடரும் என்று நேற்று அவர் தெரிவித்தார்.