சூடு பிடிக்கும் கிரிக்கெட் ஜூரம்-காசு பார்க்கத் தயாராகும் ஐபிஎல் விளம்பரதாரர்கள்
உலக்க கோப்பைக் கிரிக்கெட் போட்டியை விட பல மடங்கு காசு பார்க்கும் வாய்ப்பு ஐபிஎல் தொடரில்தான் உள்ளது. உலகின் அத்தனை முன்னணி வீரர்களும் இதில் பங்கேற்பர். இந்த கிரிக்கெட் திருவிழா அடுத்த வாரம் கோலாலகமாக தொடங்குகிறது.
இதற்கு முன்பு வரை பெரிய அளவிலான நிறுவனங்கள் ஐபிஎல்லை திரும்பிப் பார்க்காமல் இருந்தன. ஆனால் தற்போது கிரிக்கெட் ஜூரம் நாட்டையே பீடித்திருப்பதாலும், டோணி, கம்பீர் உள்ளிட்ட இந்திய அணியினருக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாலும், இந்த நிறுவனங்கள் எல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு மார்க்கெட்டிங்கில் குதித்துள்ளன.
போட்டிகளை ஒளிபரப்பப் போகும் செட்மேக்ஸ் டிவியில் தங்களது விளம்பரங்களை இடம் பெறச் செய்ய ஸ்லாட்களையும் புக் செய்ய ஆரம்பித்துள்ளனவாம்.
இதுகுறித்து மல்டி மீடியா ஸ்கீரீன் நிறுவன தலைவர் ரோஹித் குப்தா கூறுகையில், இதுவரை வராத நிறுவனங்கள் எல்லாம் இப்போது விளம்பரங்களுக்காக வர ஆரம்பித்துள்ளன. பிரமால், டாடா மோட்டார்ஸ், நிக்கான், பாரகன், கான்சாய் நெரோலாக் பெயின்ட், ஹிட்டாச்சி, ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகியோர் அவர்களில் சிலர்.
ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ள 74 போட்டிகளுக்கான விளம்பர இடங்களில் பலவற்றை ஏற்கனவே விற்று விட்டோம். இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது விளம்பரங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது என்றார் குப்தா.