அழகிரியும், திமுகவினரும் மோதலில் ஈடுபடவில்லை-தாசில்தார் விளக்கம்
மதுரை: மதுரை மாவட்டம் அம்பலக்காரன்பட்டியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், அவருடன் வந்த திமுகவினரும் எந்த மோதலிலும் ஈடுபடவில்லை. செருப்புடன் நாங்கள் கோவிலுக்கு வந்ததால் ஊர்க்காரர்கள்தான் ஆட்சேபித்தனர் என்று கூறியுள்ளார் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக காளிமுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தலைமைச் செயலாளர் மாலதி, டிஜிபி ஆகியோருக்கு காளிமுத்து எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் தாசில்தாராகவும் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறேன் கடந்த 1.4.11 அன்று மாலை 4 மணி அளவில் மத்திய மந்திரி மு.க.அழகிரி வெள்ளலூர் நாட்டை சேர்ந்த அம்பலகாரன்பட்டி வல்லடியார் கோவிலில் சாமி கும்பிட வருவதாக அறிந்ததன் பேரில் நான் வீடியோ கிராபருடன் அங்கு சென்றேன்.
அப்போது மத்திய அமைச்சர் கோவிலின் உள்ளே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அதை வீடியோ படம் எடுப்பதற்காக நாங்கள் கோவிலுக்குள் சென்றோம். செருப்பு அணிந்து உள்ளே சென்ற எங்களைப் பார்த்த பக்தர்கள் மற்றும் கோவிலுக்குள் இருந்த நிர்வாகிகள் ஆட்சேபித்து வெளியே போகச் சொன்னார்கள்.
இதனால் அந்த இடத்தில் சிறிய குழப்பம் ஏற்பட்டது. நானும் மற்றவர்களும் இந்த விவரத்தை பற்றி மதுரை மாவட்ட கலெக்டருக்கு தெரியப்படுத்தினோம். உடனே கலெக்டர் இது சம்பந்தமாக கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் தகவல் சொல்வதாகவும் அங்கு எவ்வாறு புகார் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கலெக்டர் கூறியது போலவே நான் போலீஸ் நிலையம் சென்று அவர்கள் சொன்னவாறு புகார் கொடுத்தேன். எனக்கும் மத்திய அமைச்சருக்கும் மற்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கும் எவ்வித மோதலும் பிரச்சினையும் நடைபெறவில்லை.
கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் நாங்கள் செருப்பு அணிந்திருந்ததை ஆட்சேபித்த போது மத்தியமந்திரியும் அவருடன் இருந்தவர்களும் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியேறி விட்டனர் என்று கூறியுள்ளார் காளிமுத்து.