ஜெயலலிதா தொகுதியில் எஸ்.வி.சேகர் தீவிர பிரச்சாரம்!
திருச்சி: அதிமுக தலைமையிலான அணிக்கு ஓட்டுப் போட்டால், அவர்கள் சண்டை போடத்தான் வருவாங்க, எதுவும் செய்ய மாட்டாங்க, என்றார் எஸ் வி சேகர்.
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் முன்பு அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிதான் நம்பிக்கையான கூட்டணி. கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்காங்க.
அ.தி.மு.க. கூட்டணி பொண்ணு வீட்டுக்காரங்க மாதிரி. பொண்ணு பார்க்க போகும்போது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணுக்கு என்னவெல்லாம் போடு வீங்கண்ணு கேட்டாங்க கழுத்தில் நெக்லஸ் போடுவோம், காதில் கம்மல் போடுவோம் என்று பொண்ணு வீட்டுக்காரங்க சொன்னாங்க.
உடனே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அப்புறம் என்ன போடுவீங்கண்ணு கேட்டாங்க.. அதற்கு பெண் வீட்டுக்காரங்க அடிக்கடி வந்து சண்டை போடுவோம்னாங்க. அது மாதிரிதான் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும். நமக்கு யார் நன்மை செய்றாங்களோ அவங்களுக்கு நாம் நன்மை செய்யணும் இலவச டி.வி., 1 ரூபாய் அரிசி, என பல திட்டங்களை தந்த கருணாநிதிக்கு நாம் திருப்பி நல்லது செய்யணும்.
87 வயதிலும் இளைஞர் போல உழைக்கும் கருணாநிதி 6 வது முறை முதல் அமைச்சரானால் நல்ல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவார். உங்கள் மீது நம்பிக்கை வைத்து, எங்கேயோ உள்ள கிராமத்து இளைஞர் ஆனந்தை இங்கே நிறுத்தி உள்ளார். அதுதான் கலைஞர். ஆனந்தை வெற்றி பெற செய்யுங்கள். அவர் வெற்றி பெற்றால்," அமைச்சராவார்.
ஸ்ரீரங்கம் தொகுதி பிராமணர்கள் நிறைந்தது. அதனால்தான் ஆண்டிப்பட்டியை விட்டுவிட்டு ஸ்ரீரங்கத்துக்கு வந்திருக்கிறார் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது. அந்த ஓட்டுக்களக் குறிவைத்து இப்போது திமுக அணி சார்பில் எஸ் வி சேகர் களமிறங்கியுள்ளார்.