சாதிக் பாட்சா மரண வழக்கு: சிபிஐ விசாரணை துவங்கியது, ஆவணங்களை ஒப்படைத்த சென்னை போலீஸ்
சென்னை: சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கியது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் சென்னை போலீசார் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா கடந்த மாதம் 16-ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடமும் 2ஜி வவிகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில் அவர் திடீர் என்று தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது மரணம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவருக்கு பிரேத பரிசோதனை செய்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் டாக்டர் டேகல் சாதிக் பாட்சா மூச்சு திணறி உயிர் இழந்ததாகத் தெரிவித்தார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரம் தெரியும் என்று கூறிய அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் சாதிக் பாட்சாவின் தற்கொலையில் பல சந்தேகங்கள் எழுந்தன. அவர் தற்கொலை செய்வதற்கு முன 2 பேர் காரில் வந்து அவரை மிரட்டிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தமிழக அரசின் பரிந்துரையில் சாதிக் பாட்சாவின் வழக்கை சிபிஐ எடுத்துக் கொண்டது.
சந்தேக மரணம் என்று சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவமங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் சிபிஐ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள சிபிஐ அதிகாரி இனி விசாரணை நடத்துவார்.
சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் அவர் எழுதியது தானா என்று ஆய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம் 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சாதிக் பாட்சா யாருடன் எல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவர் 2 செல்போன்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விவரங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சாதிக்பாட்சா வழக்கு சிபிஐக்கு முழுமையாக மாற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தென்சென்னை இணை கமிஷனர் பெரியய்யா தெரிவித்தார்.