ஆம்னி பஸ்ஸில் ரூ. 5.11 கோடி பறிமுதல்: 6 பேர் மீது வழக்கு-தொடர் விசராணை
திருச்சி: திருச்சியில் தனியார் ஆம்னி பஸ்ஸில் கைப்பற்றப்பட்ட ரூ. 5.11 கோடி சமபவம் தொடர்பாக பஸ் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ்ஸின் மேற்கூரையில் இருந்து ரூ. 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் அதிகாரி டாக்டர் சங்கீதா பறிமுதல் செய்தார். வாகனச் சோதனையில் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது இது தான் முதல் தடவை.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறையினர் மூலம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் உதயகுமரன், அவரது மகன் அருண் பாலாஜி, மேலாளர் பாலு ஆகிய 3 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பல பரபரப்பான தகவல்கள் அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் அவற்றை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது அங்கு காரில் வந்த 4 பேர் அதிகாரிகளைப் பார்த்தும் நைசாக ஓடிவிட்டனர். அவர்கள் யார்? யாருடைய பணம்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரி சங்கீதா திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்த சந்தேகம் மற்றும் முயற்சி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பஸ்சின் உரிமையாளர் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர் திருச்சி உதயகுமரன், அலுவலக ஊழியர்கள் செல்வராஜ், குமார், பழனி, தமிழகன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை கண்டோன்மெண்டில் உள்ள ஸ்டேட் வங்கியில் செலுத்தப்பட்டது.