பொருளாதார நெருக்கடி... பெய்ல் அவுட் கேட்கும் போர்ச்சுகல்!
கடந்த நான்கு ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரம் நிலையில்லாமல் காணப்படுகிறது. ஒரு பக்கம் நிலைமை சரியாகிவிட்டதுபோலத் தெரிந்தாலும், உண்மையில் இன்னும் நெருக்கடி தொடர்கிறது.
ஐரோப்பாவில் ஏற்கெனவே இரு முக்கிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவுக்குள்ளாகித் தவிக்கின்றன.
முதலில் வீழ்ச்சியைச் சந்தித்த நாடு அயர்லாந்து. அடுத்து கிரீஸ். இந்த வரிசையில் இப்போது சேர்ந்துள்ளது போர்ச்சுகல்.
இப்போதைய நிலையில் அந்நாட்டுக்கு 80 பில்லியன் யூரோ அல்லது 114.3 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி தேவைப்படுவதாகவும், இல்லையேல் சரிசெய்ய முடியாத பெரும் வீழ்ச்சியில் போர்ச்சுகள் தவிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
17 உறுப்பு நாடுகளைக் கொண்ட யூரோ மண்டத்தில் போர்ச்சுக்கலும் அடங்கும். இந்த 17 நாடுகளில் மிகவும் பலவீனமானது போர்ச்சுகல்தான். நீண்ட காலமாகவே இந்த நாடு கடனில் சிக்கியிருந்தது. புதிய முதலீடுகள் செய்ய வெளிநாடுகள் எதுவும் முன்வராத நிலை. போர்ச்சுகல் வெளியிட்ட கடன் பத்திரங்களும் மதிப்பிழக்கும் சூழல் உருவாகிவிட்டதால், புதிதாக எங்கும் நிதி திரட்ட இயலவில்லை.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. எனவே வெளிப்படையான மீட்பு உதவி கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பிரதமர்.
வரும் ஜூன் மாதம் புதிய தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இப்போது சக்ரடீஸ் தலைமையிலான அரசு ராஜினாமா செய்துள்ளது.
போர்ச்சுகல்லின் கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்பட்டு, உதவி வழங்கப்படும் என ஐஎம்எப் அறிவித்துள்ளது.