சாய்பாபா உடல்நிலையில் முன்னேற்றம்: புட்டபர்த்தியில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருபவர் சத்ய சாய்பாபா (85). அவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி சாய்பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிக்ச்சை அளித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. கவலைக்கிடமாக இருந்த அவரது நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அம்மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஏ.என்.சபாயா கூறியதாவது,
சாய்பாபாவின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உடல் உறுப்புகள் சீராக செயல்படுகின்றன. அவரது இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் சீராக உள்ளன. அவருடைய சிறுநீரங்கள் ஒழுங்காக செயல்படத் துவங்கியுள்ளன.
அவரது உடல் உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்கின்றன. அவருக்கு கிருமித் தொற்றால் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளி்ககவில்லை. தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளி்ககப்படுகிறது என்றார்.
இதற்கிடையே சாய்பாபா உடல்நிலை குறி்த்து பல்வேறு தவறான தகவல்கள் வருவதால் புட்டபர்த்தியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புட்டபர்த்தி செல்லும் வழிகளில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. ஆசிரமத்தை சுற்றிய பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
புட்டபர்த்தியில் தங்கி பாதுகாப்பு பணிகளை பார்வையிடும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
சாய்பாபாவின் உடல்நிலை பற்றி அடிக்கடி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதனால் பக்தர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்துவதற்குதான் புட்டபர்த்தியில் போலீஸ் படைகளை குவித்துள்ளோம். மேலும் அதிரடிப்படையினரும் வரவழைக்கப்படுகின்றனர். முக்கிய பிரமுகர்கள் யாரும் தற்போது புட்டபர்த்திக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
ஸ்ரீசத்யசாய் ஆஸ்பத்திரியில் அடிக்கடி பக்தர்கள் முற்றுகையிட்டதால் அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் அனுமதி இல்லாமல் யாரும் செல்ல முடியாது. பாதுகாப்பு கருதி புட்டபர்த்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நிலைமை ஓரளவு பதட்டம் குறைந்ததால் தடை உத்தரவை நீக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டன.