ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்க்கவில்லை.. எதிர்க்கவும் மாட்டேன்! - எடியூரப்பா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று காலை வந்தார்.
தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் அவருக்கு பா.ஜனதாவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சூளகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேப்பனப்பள்ளி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பிரேமநாதனை ஆதரித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், "தமிழக-கர்நாடக மாநிலத்தினரிடையே உள்ள உறவு அண்ணன்-தம்பி உறவு போன்றது. சென்னையில் சர்வக்ஞர் சிலையை திறந்து வைக்க சென்றேன். அதே போல பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. தமிழக-கர்நாடக மாநிலத்தினரிடையே நல்ல நட்புறவு உள்ளது. இந்த உறவு இனியும் தொடரும்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே இருந்தனர். அப்போது பா.ஜனதா ஆட்சி அங்கு மலர வேண்டும் என்று எண்ணினோம். இன்று கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி சிறப்புடன் நடந்து வருகிறது.
விவசாயிகளுக்கு 1 ரூபாய் வட்டிக்கு சாகுபடி கடன் வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டு அங்கு விவசாயம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு 18 வயது ஆன உடன் ரூ.1.5 லட்சம் கிடைக்கும் வகையில் பாக்கியலட்சுமி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடியும், கர்நாடக மாநிலத்தில் நானும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய கட்சியான பா.ஜனதாவை மக்கள் ஆதரியுங்கள்," என்றார் எடியூரப்பா.
எதிர்க்க மாட்டேன்...
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக மக்களுக்கு நான் நன்கு அறிமுகமானவன் என்பதால் பிரசாரத்திற்கு வந்துள்ளேன். தேர்தல் நேரம் என்பதால் நான் காவிரி பிரச்சினை பற்றிப் பேச விரும்பவில்லை.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நான் ஒரு போதும் எதிர்க்கவில்லை. எதிர்க்கவும் மாட்டேன். மக்களின் குடிநீர் தேவை என்பதால் அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தத் திட்டம் தடையின்றி நிறைவேறும்," என்றார்.
இந்தப் பகுதி மக்கள் தமிழ், தெலுங்குடன் கன்னடமும் நன்கு அறிந்தவர்கள். எனவே அவரது பிரச்சாரம் பெரும்பாலும் கன்னடத்திலேயே இருந்தது.