வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக ராசா அண்ணன் மீது வழக்கு
பெரம்பலூர்: வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்ததாக கூறி முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவின் அண்ணன் கலியபெருமாள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது மட்டுமல்லாமல், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, சுயேச்சை வேட்பாளரின் காரைப் பயன்படுத்தியதாகவும் கலியபெருமாள் மீது வழக்கு் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளையின் தலைவராகவும் கலியபெருமாள் இருக்கிறார். வியாழக்கிழமயைன்று இவர் எறையூர் அருகே உள்ள மனோன்மணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 2 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும், கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாக தேர்தல் அதிகாரிக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து அங்கு போலீஸ் படை விரைந்தது. ஆனால் அதற்குள் கலியபெருமாள் தனது காரை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது. மேலும், சுயேச்சே வேட்பாளரான ரவிச்சந்திரன் என்பவரது காரில் கிளம்பினார்.
போலீஸார் நடத்திய சோதனையில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராசா படம் பொறித்த காலண்டர்கள் சிக்கின. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கலியபெருமாள் மீதும், கார் டிரைவர் அக்பர் என்பவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயக்குமார் கூறுகையில், கலியபெருமாள் சுயேச்சை வேட்பாளருக்கான காரைப் பயன்படுத்தியதால், அந்த செலவுத் தொகை திமுகவேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதற்காக சுயேச்சை வேட்பாளர் ரவிச்சந்திரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.