சாய்பாபா உடல் நலக்குறைவு-புட்டபர்த்திக்கு சர்வதேச மவுசு
புட்டபர்த்தி: சாய்பாபாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து புட்டபர்த்தி சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்திதான் சாய்பாபாவின் தலைமைப் பீடமாகும். இதுவரை சாய்பாபாவின் பக்தர்கள் மத்தியில்தான் புட்டபர்த்தி பிரபலமாக இருந்தது. ஆனால்தற்போது சாய்பாபா உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் புட்டபர்த்தி உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.
புட்டபர்த்தியின் மக்கள் தொகையே 10 ஆயிரம்தான். ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்று கொண்டுள்ளனர். கிராமமாக இருந்தாலும் கூட இங்கு சொகுசு ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், வில்லாக்கள், பல்வேறு வகையான கடைகள் என களை கட்டியுள்ளது புட்டபர்த்தி.
இன்டர்நெட் பார்லர்கள், இசை விற்பனையகங்கள், அன்னியச் செலாவணி மாற்று நிலையங்கள் என ஒரு நகருக்கே உரிய அத்தனை அம்சங்களும் இங்கு நிறைந்துள்ளன.
இத்தாலி, பிரெஞ்ச், திபெத், சைனீஸ் வகை உணவுகளைப் பரிமாறும் ஹோட்டல்களும் இங்கு உள்ளன.
இங்குள்ள விற்பனையகங்களில் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் பேசக் கூடியவர்களும் கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சாய்பாபாவின் உடல் நலம் தற்போது தேறி வருவதாக சாய்பாபா அறக்கட்டளை செய்திகள் தெரிவிக்கின்றன.