அந்தோணி ஒரு கும்பகர்ணன்: கேரள முதல்வர் அச்சுதானந்தன் தாக்கு
ஆலப்புழா: தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருந்தார் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று விமர்சித்துள்ளார். நேற்று முன்தினம் தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஒரு அமுல் பேபி என்றார்.
கடந்த 5 ஆண்டு காலமாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் தூங்கிக் கொண்டிருந்தாரா அல்லது தூங்குவதுபோல நடித்தாரா என்று தெரியவில்லை. தற்போது திடீர் என்று விழித்துக் கொண்டு ஊழல் பற்றி பேசுகிறார் என்று அந்தோணி தெரிவித்திருந்தார்.
இதற்கு அச்சுதானந்தன்(87) கொடுத்த பதிலடி,
நான் ஒன்றும் தூங்கவில்லை. அந்தோணி தான் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறார். தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது கூட தூங்கிக் கொண்டிருந்தார். கேரளாவில் உள்ள மாராடு கிராமத்தில் சாதிப் படுகொலைகள் நடந்தபோது அப்போதைய முதல்வர் அந்தோணி தூங்கத் தான் செய்தார். லோக்பால் மசோதா குழுவில் அந்தோணி ஏன் சேர்க்கப்படவில்லை என்றார்.
இதற்கிடையே ராகுல் காந்தியை அமுல் பேபி என்று விமர்சித்துள்ளது அநாகரீகமானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.