வாக்களி்கக பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்: கமிஷனர் தா.கார்த்திகேயன்
சென்னை: வாக்களி்கக பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று வாக்களிக்க மக்கள் பணம் வாங்குவதும் குற்றமாகும். அவ்வாறு பணம் வாங்கும் வாக்காளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் இதுபோன்ற புகார்கள் தெரிவிக்க விரும்புவோர் 1800 425 2010, 1800 425 2011 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வாக்குச்சாவடி சீட்டுகள் கிடைக்காதவர்களுக்காக நாளை வாக்குச்சாவடி மையங்களி்ல் வாக்காளர் உதவி மையம் அமைக்கப்படும். வாக்காளர்கள் அந்த மையங்களில் இருந்து வாக்குச்சாவடி சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் புகைப்படம் உள்ளவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளையோ அல்லது வாக்குச்சீட்டுகளையோ வைத்து வாக்களிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் புகைப்படம் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள 13 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.