வங்கிப் பணம் ரூ.1.18 கோடியை 'பறிமுதல்' செய்த பறக்கும் படை!
சென்னை: சென்னையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்துக்கு சொந்தமான ரூ.1 கோடியே 18 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தேர்தல் கமிஷன் பறக்கும்படை அதிகாரிகள் ஷியாம் சுந்தர், பிரகாஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் ஆகியோர், சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி 24-வது தெருவில் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது வேகமாக வந்த சிறிய வேனை மடக்கினார்கள். அந்த வேன் நிற்காமல் சென்றது. உடனே பறக்கும்படையினர் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றனர். ஜி.கே.எம். காலனியை சுற்றிச் சுற்றி அந்த வேன் வந்தது.
இறுதியில் ஜி.கே.எம். காலனி 11-வது தெருவில் வேனை மடக்கி பிடித்தார்கள்.
அந்த வேனுக்குள் ஏராளமான சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. உடனே பறக்கும் படை அதிகாரிகள் அந்த வேனை பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன், தேர்தல் கமிஷன் பார்வையாளர் கிளமென்ட் ராஜ்குமார், வருமானவரித்துறை துணை இயக்குனர் நந்தகுமார், துணை போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் சுப்பாராஜ், இன்ஸ்பெக்டர்கள் சம்பத், மாசானம் ஆகியோரும் விரைந்து வந்தனர்.
வேனில் மொத்தம் ரூ.1 கோடியே 18 லட்சத்து 87 ஆயிரத்து 490 இருந்ததாக ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது என்று தேர்தல் பார்வையாளர் கிளமென்ட் ராஜ்குமார் தெரிவித்தார்.
ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்த் பணம்
போலீஸ் விசாரணையில், வேனில் கொண்டு வரப்பட்ட பணம் ஆர்.பி.எஸ். (ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து) என்ற வங்கிக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அந்த வங்கியின் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலித்து, பின்னர் அந்த பணத்தை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.பி.எஸ். வங்கியில் டெபாசிட் செய்வதற்காக தனியார் செக்யூரிட்டி வேன் மூலம் கொண்டு வந்ததாக தெரிய வந்தது. எந்தெந்த வாடிக்கையாளர்களிடம், எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களும் அந்தப் பணத்துடன் இருந்தது.
கருவூலத்தில் ஒப்படைப்பு
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி, அ.தி.மு.க. தொண்டர்களுடன் பெரவள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். இந்த பணம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
முறையாக விசாரணை நடத்தி அதன்பிறகு முடிவு செய்யப்படும் என்றும், அதுவரை இந்த பணம் அரசு கருவூலத்தில் இருக்கும், என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அ.தி.மு.க. பிரமுகர் வீடு சோதனை
அண்ணாநகர் மேற்கு ஜெ-பிளாக் 10-வது தெருவில் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர் கண்ணன் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தி ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறக்கும்படை அதிகாரி கோவிந்தசாமி பறிமுதல் செய்தார் என்றும், அந்த பணம் வருமானவரித் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் கூறினார்கள்.
நேற்று மட்டும் ரூ.1 கோடியே 28 லட்சம் அளவுக்கு பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இந்தப் பணத்துக்கான அனைத்து ஆவணங்களும் கிடைத்த பிறகும், பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர் அதிகாரிகள், என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications