சுயேச்சையை தாக்கியதாக அமைச்சரின் சகோதரர் உள்பட 16 பேர் மீது வழக்கு
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே சுயேட்சை வேட்பாளரை தாக்கியதற்காக அமைச்சர் பூங்கோதையின் சகோதரர் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆலங்குளம் அருகே உள்ளது நல்லூர். இது திமுக வேட்பாளர் அமைச்சர் பூங்கோதையின் சொந்த ஊராகும். இங்கு மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சுயேட்சை வேட்பாளர் கேசவராஜா வந்தார். அவருடன் தேமுதிக கலை இலக்கிய அணி மாநில துணை செயலாளர் நடிகர் ராஜேந்திரநாத் வந்திருந்தார்.
இந்த இருவரும் வாக்குச்சாவடிக்குள் செல்ல, மேற்கு மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்றிருந்தார். அவருடன் சில தொண்டர்களும் நின்றிருந்தனர்.
அப்போது அமைச்சர் பூங்கோதை சகோதரர் எழில்வாணன் மற்றும் சிலர் அங்கு வந்து இங்கு ஏன் நிற்கிறீர்கள், வெளியூர்காரர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டார்களாம். இதற்கு அய்யம்பெருமாள் எதிர்ப்பு தெரிவித்து பேசவே இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் அய்யம்பெருமாள் தாக்கப்பட்டு கார், செல்போனும் நொருக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த நடிகர் ராஜேந்திரநாத், சுயேட்சை வேட்பாளர் கேசவராஜா ஆகியோரும் தாக்கப்பட்டனர். சுயேட்சை வேட்பாளரின் காரும் சேதமடைந்தது. இதையடுத்து அமைச்சர் பூங்கோதை சகோதரர் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.