பாலியல் கொடுமையால் பெண் தொழிலாளி தற்கொலை: குற்றவாளி கைது
கடலூர்: பாலியல் கொடுமை காரணமாக பெண் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் முதுநகர் அருகே உள்ளது சங்கொலிக்குப்பம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஐய்யப்பன் (30). இவரது மனைவி கனிமொழி (25). இவர்களுக்கு சுதர்சன்(5), சுரேந்தர்(4) என்ற குழந்தைகள் உள்ளனர்.
கனிமொழி கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.
அவருடன் பணிபுரியும் மணிவண்ணன் என்பவர் கனிமொழியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அவர் தனது குழந்தை சுதர்சனுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்தார். இதில் அவர்கள் மயங்கி கீழே விழுந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் கனிமொழி இறந்தார். சுதர்சன் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர்.