இரட்டை சகோதரியிடம் கருமுட்டை தானம் பெற்று தாயான பெண்
பாரீஸ்: குரோமோசோம் குறைபாடுள்ள ஒரு பெண் தனது சகோதரியிடம் இருந்து கருமுட்டை தானத்தின் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பாரீசைச் சேர்ந்த இரட்டையர்கள் காரின் திரியட், ஸ்டீபனி(39). இருவருக்குமே குரோமோசோம் குறைபாடு உள்ளது. இருப்பினும் ஸ்டீபனிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆனால் திரியட் கடந்த 15 ஆண்டுகளாக செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முயற்சித்து வந்தார். திரியட்டிற்கு போதிய கருமுட்டைகள் உற்பத்தியாகவில்லை.
இதையடுத்து அவரது இரட்டை சகோதரியான ஸ்டீபனியிடம் கருமுட்டை தானம் பெற்று கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி பாரிசில் அழகிய பெண் குழந்தையை பெற்றார் திரியட். அந்த குழந்தைக்கு விக்டோரியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவுக்கு அவளது தாய் போன்று குரோமோசோம் குறைபாடு இல்லை.
திரியட்டுக்குள்ள இந்த குறைபாடு 2 ஆயிரத்து 500 பெண்களில் ஒருவருக்கு வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குரோமோசோம் குறைபாடுள்ள இரட்டையர்களுக்கு இடையே கருமுட்டை தானம் செய்யப்பட்டது இதுவே முதல் தடவை ஆகும்.