சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் அறிவிப்பு
புட்டபர்த்தி: முக்கிய உறுப்புகள் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றும் வரும் சத்ய சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 28-ம் தேதி சாய்பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிக்ச்சை அளித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது முக்கிய உறுப்புகள் சிகிச்சைக்கு குறைநத அளவே ஒத்துழைக்கிறது. அவரது ரத்த அழுத்தம் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. அதற்கு உரிய மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இது மருத்துவர்களுக்கு கவலை அளித்துள்ளது என்று சத்ய சாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே சாய்பாபா அறக்கட்டளை நிதிகள் அவர் அனுமதியின்றி செலவழிக்கப்படுவதாகவும், வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளை சத்ய சாய்பாபா மத்திய அறக்கட்டளை மறுத்துள்ளது.
அறக்கட்டளையின் அனைத்து பணிகளுக்கும் சாய்பாபா ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பணிகளுக்கான நிதி வழங்கும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் அறக்கட்டளையின் நிறுவனரான சாய்பாபாவுக்கு மட்டும் தான் உள்ளது என்று அறக்கட்டளை நேற்றிரவு தெரிவித்துள்ளது.