மே 16 முதல் என்ஜினீயரிங் கவுன்சிலிங் விண்ணப்பம் வினியோகம்: விலை ரூ. 500
சென்னை: பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் வரும் மே மாதம் 16-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது என்று சென்னை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டில் மொத்தம் 486 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் தற்போது 1 லட்சத்து 90 ஆயிரம் பொறியியல் (பி.இ.) இடங்கள் உள்ளன. இந்த வருடம் புதிதாக பல கல்லூரிகள் விண்ணப்பித்து இருப்பதால் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
இதில் 1 லட்சத்து 23 ஆயிரம் இடங்களை அரசு ஒதுக்குகிறது. அதற்கான கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான கவுன்சிலிங்கிற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பங்கள் வரும் மே மாதம் 16-ம் தேதி முதல் வழங்கப்படும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 500.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு ரூ.250 மட்டுமே. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், அரசு பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் மற்றும் சில வங்கிகள் உள்பட 58 இடங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் தொடங்கிய பின்னர் பொறியியல் கவுன்சிலிங் தொடங்கும். பொறியியல் கவுன்சிலிங் பெரும்பாலும் ஜுன் மாத இறுதியில் அல்லது ஜுலை முதல் வாரத்தில் துவங்கும். அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வருடந்தோறும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பிப்பார்கள்.
இந்த வருடம் 40 பேர் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்து இருந்தனர். எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 84 கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைப்படி கல்லூரி நிலத்திற்கான தஸ்தாவேஜும், கட்டிடத்திற்கான அனுமதியும் தேவை.
ஆனால் 80 சதவீத கல்லூரிகளில் கட்டிடத்திற்கான அனுமதி பெறவில்லை. இதனால் அந்த கல்லூரிகளின் மனுக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. புதிய படிப்புகள் கேட்டு 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. எனவே, இந்த ஆண்டு எப்படியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.இ. இடங்கள் அதிகரிக்கும். அண்ணா பல்கலைக்கழகத்தை பொருத்தவரை ஆடை கட்டுப்பாடு மற்றும் செல்போன் தடைகள் ஆகியவை அப்படியே அமலில் உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார்.
முதல் தலைமுறை பட்டதாரிகளாக படிக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் டியுசன் கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சலுகை இந்த ஆண்டும் தொடரும்.