பழங்கள், இறைச்சி விலை உயர்வு: உணவுப் பணவீக்கம் 8.74 சதவீதமானது!!
டெல்லி: உணவுப் பணவீக்க குறியீட்டெண் மேலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இறைச்சி மற்றும் பழங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய புள்ளிவிவரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஏப்ரல் 9-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்திய உணவுப் பணவீக்கம் 8.28 சதவீதமாக இருந்தது.
ஆனால் அதற்கடுத்த வாரத்திலேயே நாட்டின் பொதுப் பணவீக்க குறியீட்டெண்ணில் உயர்வு ஏற்பட்டது.
இந்த நிலையில், நடப்பு உணவுப் பணவீக்கப் புள்ளி விவரங்களை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.
பிரதான உணவுப் பொருள்களின் விலை இன்னும் குறையாத நிலையில் உள்ளதால், உணவுப் பணவீக்கம் குறையவில்லை. குறிப்பாக இறைச்சி, காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
எரிபொருள்களின் விலையில் 13.05 சதவீதமும், முதன்மைப் பொருள்களின் விலையில் 11.96 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.