6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி விடுதலை
1993-ம் ஆண்டு மே மாதம் 24-ந்தேதி அப்போதைய சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கோபால் பி.ஹொசூர் தலைமையிலான போலீசார் ஒரு ஜீப்பில் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு மாதேஸ்வரன் மலையில் இருந்து கொள்ளேகால் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதேஸ்வரன் மலையில் காத்திருந்த வீரப்பனும் கூட்டாளிகளும் சேர்ந்து போலீஸ் ஜீப் மீது சரமாரியாக சுட்டனர்.
6 போலீசார் சாவு
இந்த திடீர் தாக்குதலில் ஜீப்பில் வந்த போலீஸ்காரர்கள் உத்தப்பா, மாஞ்சய்யா, உவவ்யா, பிரபாகர், சுவாமி மற்றும் ஜீப் டிரைவர் நரசப்பா ஆகிய 6 பேர் அதே இடத்தில் இறந்தனர். போலீஸ் சூப்பிரண்டு கோபால் பி.ஹொசூர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
பின்னர் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் போலீஸ் ஜீப்பில் இருந்த துப்பாக்கிகளை கொள்ளையடித்துக்கொண்டு காட்டுக்குள் தப்பி ஓடினர்.
முத்துலட்சுமி விடுதலை
இந்த சம்பவம் குறித்து மாதேஸ்வரன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தின் போது வீரப்பனுடன் அவனது மனைவி முத்துலட்சுமி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பாப்பாத்தி ஆகியோரும் உடன் இருந்ததாகக் கூறி அவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சாம்ராஜ்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஏ.சி.வித்யாதர் தீர்ப்பளித்தார்.
அதில், முத்துலட்சுமி மற்றும் பாப்பாத்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கில் இருந்து முத்துலட்சுமி, பாப்பாத்தி 2 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று கூறினார்.
பாலாறு குண்டு வெடிப்பு வழக்கிலும் விடுதலை
ஏற்கனவே பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முத்துலட்சுமி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் முத்துலட்சுமிக்கும், பாப்பாத்திக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதால் விடுதலை செய்யப்படாமல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கிலும் முத்துலட்சுமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து வெளியில் வருகிறார்.
முத்துலட்சுமியை விடுதலை செய்ய வேண்டும் என ஏற்கெனவே பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.