இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக புதிய ஆதாரங்கள்: சேனல் 4 செய்தியால் பரபரப்பு
இறுதிப் போரி்ன்போது போர்ப் பகுதியில் இருந்த 1 லட்சம் மக்களுக்கு கணக்கே காட்டவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐநா செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்படவுள்ள இந்த வேளையில், வெளியுலகத் தொடர்பின்றி மறைக்கப்பட்டுள்ள இலங்கையின் வடபகுதியில் பொதுமக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை, அடக்கி வைக்கப்பட்டுள்ள முகாம்கள், அந்த மக்கள் மீதான பல்வேறு துஸ்பிரயோகங்கள் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற ஆதாரங்கள் சேனல் 4 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கை மாற்றமின்றி வெளியிடப்படும்: ஐ.நா:
இந் நிலையி்ல் இறுதிப் போரின்போது இலங்கை அரசு செய்துள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே வெளியிடப்படும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பு இயக்குநர் கூறியதாவது,
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையில் அந்நாட்டு அரசின் கருத்தை சேர்ப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசோ அறிக்கை வெளி வராமல் தடுப்பதிலேயே குறியாக உள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவின் உதவியால் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசு என்னதான் முயன்றாலும் ஐ.நா. நிச்சயம் அறிக்கையை வெளியிடும் என்றார்.
ஐ.நா.வுக்கு இலங்கை மிரட்டல்:
இதற்கிடையே இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஐ.நா. வெளியிடும் பச்சத்தில் அது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயல்பாடுகளைத் தான் பாதிக்கும் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பெரிஸ் கூறியதாவது,
போர்க்குற்ற அறிக்கையை வெளியிட்டால் அது ஐ.நா.வின் செயல்பாடுகளைத் தான் பெரிதும் பாதிக்கும். அறிக்கையை வெளியிடுவது என்பது தவறானது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை ஆராய நடவடிக்கை எடுப்பதும் தவறானது.
அந்த அறிக்கை ஐ.நா. செயலாளருக்கு அறிவுரை வழங்கத் தான் கொடுக்கப்பட்டது. அதை ஏன் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றார்.
இந்த அறிக்கைக்கு உங்களின் பதில் என்ன என்று கேட்டதற்கு, 7 மாத காலமாக தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு சில நாட்களில் பதில் சொல்லிவிட முடியாது. இதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சகத்தின் செயலர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.