வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் துப்பாக்கி வெடித்தது: வீரர் காயம்
சங்ககிரி: சங்ககிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளியில் திடீர் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 13-ம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. சங்ககிரியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இன்று காலை தனது துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராவிதமாக துப்பாக்கியில் இருந்த குண்டு தீடீர் என்று வெடித்தது. அந்த குண்டு பாதுகாப்புப் படை வீரர் மீதே பாயந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எப்படி குண்டு வெடித்தது, அந்த வீரர் மீது எப்படி பாய்ந்தது என்பது குறி்தது அந்த மையத்தில் இருந்த சக வீரர் ஒருவரிடம் தீவர விசாரணை நடந்து வருகிறது.
மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் திடீர் என்று குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஒரு அறையின் ஜன்னல் திறந்துகிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.