தபால் ஓட்டுக்குப் பணம்? - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சென்னை: தபால் ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தபால் மூலம் ஓட்டு போடுபவர்களிடம் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்கள் ஆதரவு திரட்டுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை கடந்த 11.4.2011 அன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்து விட்டது. எனவே இனிமேல் யாரும், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளிலோ, தேர்தல் பிரசாரத்திலோ, எந்த கட்சிக்கும் ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபடக்கூடாது.
அரசு ஊழியர்கள் யாராவது இனி தபால் மூலம் வாக்களிப்பவர்களிடம் பிரசாரம் செய்தாலோ, பணம் கொடுத்து ஆதரவு திரட்டினாலோ அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பிரசாரம் ஓய்ந்து விட்ட பிறகு வேட்பாளர்களோ, அரசியல் கட்சிகளோ ஆதரவு திரட்டுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகக் கருதப்படும். தபால் ஓட்டு போடுபவர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்வது, லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக கருதப்பட்டு அதற்கு ஏற்ப சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எந்த விதி மீறப்பட்டாலும் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும்.
-இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.