தமிழக போலீஸ் எதிர்ப்பால் மீண்டும் சிறைக்குப் போன வீரப்பன் மனைவி முத்துலட்சுமி!
மேட்டூர்: கர்நாடக நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 1993 ம் ஆண்டு 6 போலீஸ்காரர்களை சந்தன கடத்தல் வீரப்பனும் , அவரது மனைவி முத்துலட்சுமியும் சுட்டுகொன்றதாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், முத்துலட்சுமியை சாம்ராஜ்நகர் போலீசார் கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முத்துலட்சுமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார்.
இதனால், முத்துலட்சுமியை சாம்ராஜ் நகர் கிளைச் சிறையிலிருந்து பெங்களூர் மத்திய சிறைக்கு கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு மாற்றினர்.
இந்த நிலையில், அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த புதன் கிழமை சாம்ராஜ்நகர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து முத்துலட்சுமி விடுதலை செய்யப்பட்டாலும், சிறையில் இருந்து அவரை போலீசார் விடுதலை செய்யவில்லை.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கில் முத்துலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு கோபி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிவடையாததால், முத்துலட்சுமியை சிறையில் இருந்து விடுவிக்க தமிழக போலீசார் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர்.
இதனால், முத்துலட்சுமியை கர்நாடக சிறை அதிகாரிகள் விடுதலை செய்யாமல், சிறையிலேயே அடைத்து வைத்துள்ளனர்.
முத்துலட்சுமி விடுதலையான செய்தி தெரிந்து அவரது இரு மகள்களும், உறவினர்களும் பெங்களூர் மத்திய சிறை முன்பு காத்து இருந்தனர். ஆனால், முத்துலட்சுமி விடுதலையாகி வெளியே வராததால் அவர்கள் ஏமாற்றத்துடன் தங்களது ஊருக்கு திரும்பிச் சென்றனர்.