ஆர். நல்லகண்ணுவுக்கு தர்ம தலைவன் விருது: பாளையில் மே 3ல் வழங்கப்படுகிறது
நெல்லை: தாமிரபரணியை காத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாடு குழு தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு தர்ம தலைவன் என்ற விருது பாளையங்கோட்டையில் வரும் 3-ம் தேதி வழங்கப்படுகிறது.
இது குறித்து தாமிரபரணி நிறுவனர், நிர்வாக அறங்காவலர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் கூறியதாவது:
நெல்லை, தூத்துககுடி மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்து 150 குளங்களையும் இலவசமாக தூர் வார வேண்டும். அனைத்து குளங்களையும் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் கல்லினால் ஆன கரை கட்டி ஆகாய தாமரை அகற்ற வேண்டும்.
தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தி தேவையற்ற செடி, கொடிகளை அகற்ற வேண்டும். தாமிரபரணி யாத்திரையை அறிமுகப்படுத்தி கரையோரங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும். தாமிரபரணி பிறந்த வைகாசி விசாக தினத்தை தாமிரபரணி தினமாக அரசு அறிவிக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாடு குழு தலைவர் ஆர். நல்லக்கண்ணுவுக்கு 'தர்ம தலைவன்' என்ற விருது பாளை ஜவஹர் மைதானத்தில் வரும் 3-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வழங்கப்படுகிறது.
மகாத்மா காந்தியின் நேரடி உதவியாளர் கல்யாணம் இந்த விருதை வழங்குகிறார். இதில் பல்வேறு அமைப்பினர், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் என்றார்.