சென்னையில் சாய்பாபா சிலை: தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை
சென்னை: சத்ய சாய்பாபாவுக்கு சென்னையின் பிரதானப் பகுதியில் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கருணையின் வடிவாய் இந்த மண்ணுலகில் நடமாடிய சத்ய சாய்பாபபாவின் மரணச் செய்தி அவரது பக்தர்களுக்கு நீங்காத துயரத்தை அளித்துள்ளது.
ஆன்மிக அற்புதங்கள் பல நிகழ்த்தி பல கோடி மக்களின் இதயம் கவர்ந்தவர் சத்ய சாய்பாபா. அவரது சேவைப் பணிகளால் பல லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
அவரின் மருத்துவ சேவை அதிலும் குறிப்பாக இலவச இதய அறுவை சிகிச்சையால் பல்லாயிரக் கணக்கான ஏழை, எளிய மக்கள் பயனடைகின்றனர்.
சாய் கங்கா திட்டம் மூலமாக சென்னை மாநகருக்கு ரூ. 450 கோடி மதிப்பில் குடிநீர் வழங்கி சென்னை மக்களின் தாகத்தைத் தணித்தவர்.
அவரது நலத்திட்டங்களால் ஆதிவாசி மக்கள், தலித் மக்கள், ஏழை, எளியோர் பயன் அடைகின்றனர். அற்புதமான உபதேசங்கள், அறிவுரைகள் வாயிலாக பலரது வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்.
அத்தகைய பகவான் சத்ய சாய்பாபாவுக்கு சென்னையின் பிரதானப் பகுதியில் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும். மேலும், அவரது பெயரை சென்னையில் உள்ள பிரதானச் சாலை ஒன்றுக்கு வைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்