சாய்பாபாவுக்கு சச்சின் டெண்டுல்கர் கண்ணீர் அஞ்சலி
பிரசாந்தி நிலையத்திற்கு இன்று காலை வந்த சச்சின், அங்கு பொதுமக்களின் இறுதி தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள பாபாவின் உடலைப் பார்த்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வணங்கினார் சச்சின்.
சச்சின் மிகவும் தீவிரமான சாய்பாபா பக்தர் ஆவார். கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி இந்தியா லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி புட்டபர்த்தி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்திய லெவன் அணிக்கு சச்சின் தலைமை தாங்கினார். அன்று முதல் அவர் தீவிர சாய்பாபா பக்தரானார். அடிக்கடி புட்டபர்த்திக்கு வந்து சென்று பாபாவை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
சாய்பாபாவின் உடல் நலம் சரியில்லை என்பதால், தனது 38வது பிறந்த நாளைக் கூட நேற்று அவர் கொண்டாடவில்லை. ஐபிஎல் போட்டியிலும் கூட ஆடுவதில்லை என்ற முடிவில்தான் இருந்தார். இந்த நிலையில்தான் பாபாவின் மரணச் செய்தி வந்து சேர்ந்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும் அணியின் நலன் கருதி அவர் நேற்றைய போட்டியில் ஆடினார். இருப்பினும் அவரால் முழுமையாக மனதை ஈடுபடுத்தி ஆட முடியவில்லை என்பது அவரது ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்தது.
நேற்றைய போட்டியின் முடிவில் சச்சின் நேராக தனது ஹோட்டல் அறைக்குச் சென்று வெளியில் வராமல் உள்ளேயே சோகத்துடன் இருந்தார். நேற்று காலை சாப்பாடு கூட அவர் சாப்பிடவில்லையாம். மேலும் தன்னைப் பார்க்க யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார் என்று ஹோட்டல் மேலாளர் தெரிவித்தார். தனது அணி உறுப்பினர்களைக் கூட சச்சின் நேற்று போட்டிக்கு முன்பு வரை சந்திக்கவில்லை.
நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது சாய்பாபாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சியர்கேர்ள்ஸ் எனப்படும் அழகிகளின் ஆட்டம் இடம் பெறவில்லை. மேலும், மைதானத்தில் இசை எதுவும் ஒலிக்கப்படவில்லை.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு சாய்பாபாவை கடைசியாக சந்தித்து அவரது ஆசியைப் பெற்றார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்பாபா பற்றிய மேலும் செய்திகள்
சச்சின் சாய்பாபாவுக்கு அஞ்சலி-வீடியோ
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்