புதன்கிழமை சாய்பாபா உடல் அடக்கம்-5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்
புட்டபர்த்தி: மறைந்த ஆன்மீகத் தலைவர் சத்ய சாய்பாபாவின் உடல் அடக்கம் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அரசன் முதல் ஆண்டி வரை அத்தனை தரப்பினராலும் வணங்கப்பட்ட ஒரு ஆன்மீகத் தலைவர் சாய்பாபா. அவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சாய்பாபா நேற்று காலை 7. 40 மணிக்கு மரணமடைந்தார். அவரது மறைவு சாய்பாபாவின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. உலகெங்கிலும் உள்ள சாய் பாபா மையங்களில் பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். புட்டபர்த்தியிலும் சோக அலை வீசுகிறது.
85 வயதான சாய்பாபாவின் மரணச் செய்தி நேற்று காலை பத்தேகால் மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டது.
பாபாவின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரஷாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் ஹால் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை வரை உடல் வைக்கப்பட்டிருக்கும்.
அவரது உடலை செவ்வாய்க்கிழமை வரை அனைவரும் கண்டு இறுதி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சாய்பாபாவின் இல்லம் உள்ள யஜூர் மந்திர் அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்து ஆன்மீகத் தலைவர்கள் உடல் அடக்க நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
உடல் அடக்கம் புதன்கிழமை நடைபெறும் எனத் தெரிவித்துள்ள ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சவீதா ரெட்டி, அடக்கம் நடைபெறும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அதற்கான விரிவான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பக்தர்கள் புட்டபர்த்தி வருகின்றனர்.
பாபாவின் உடல் ஆரஞ்சு நிற உடையால் மூடப்பட்டிருந்தது. அவரது கண்கள் வரையிலும் துணியைப் போர்த்தியிருந்ததாக உடலை நேரில் பார்த்த சாய் குமார் என்ற உள்ளூர் வர்த்தகர் தெரிவித்தார். பாபாவின் உடலுக்கு அருகே இருந்த யாருமே பேசவில்லை. மாறாக அவர்களது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது என்றார் அவர்.
நேற்று மாலை 3 மணியளவில் சாய் குல்வந்த் ஹாலுக்கு சாய்பாபாவின் உடல் மாற்றப்பட்டது. அங்குதான் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார் சாய்பாபா. பக்தர்களையும் இங்குதான் அவர் சந்தித்து தரிசனம் தருவார்.
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்