தமிழக வழக்கில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டார் முத்துலட்சுமி
பெங்களூர்: தமிழகத்தில் உள்ள வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக பெங்களூர் சிறையிலிருந்து சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை, தமிழக போலீஸார் பலத்த பாதுகாப்புடன் தமிழகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில் இன்று காலை நான்கு பேர் கொண்ட தமிழக போலீஸ் குழு, முத்துலட்சுமியை தமிழகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது என்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் முத்துலட்சுமியை கர்நாடக போலீஸார் கைது செய்தனர். அவர் மீது ஐந்து வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவை அனைத்திலுமிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். ஐந்தாவது மற்றும் கடைசி வழக்கிலிருந்து கடந்த ஏப்ரல் 20ம் தேதி சாம்ராஜ் நகர் கோர்ட், முத்துலட்சுமியை விடுதலை செய்தது.
இருப்பினும் அவரை விடுதலை செய்ய தமிழக காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. முத்துலட்சுமி மீது தமிழத்தின் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலவையில் இருப்பதால் முத்துலட்சுமியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூர் சிறையிலிருந்து முத்துலட்சுமி விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று தமிழக போலீஸாரிடம் முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறை ஒப்படைத்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.