சச்சின் டெண்டுல்கரைக் கெளரவிக்க மியூசியம் அமைக்கும் மகா. அரசு
மும்பை: கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரைக் கெளரவப்படுத்தும் வகையில் அவருக்காக ஒரு அருங்காட்சியகத்தை அமைக்கிறது மகாராஷ்டிர அரசு.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடி வருகிறார் சச்சின். இன்னும் அவரது ஆட்டத்தில் வீரியம் குறையவில்லை. தொடர்ந்து சாதனைகளைப் படைத்தபடியே இருக்கிறார்.
பல உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சினைக் கெளரவிக்க அவர் பிறந்த மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை அம்மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டெண்டுல்கரின் பெயரில் பெரிய அளவில் விளையாட்டு அருங்காட்சியகம் அமைக்க அரசு தீர்மானித்துள்ளது என்றார்.
இந்த அருங்காட்சியகத்தில் சச்சின் குறித்த அனைத்துத் தகவல்களும் இடம் பெறும். அரிய புகைப்படங்கள், சச்சின் பயன்படுத்தி பேட் உள்ளிட்டவையும் இடம் பெறும் எனத் தெரிகிறது.
அதேபோல அந்த அருங்காட்சியகத்தில் சச்சின் சிலையும் இடம் பெறவுள்ளது.