பஜாஜ் டிஸ்கவர் 125 சிசி பைக் தமிழகத்தில் அறிமுகம்
இருசக்கர வாகன தயாரிப்பில் நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ திகழ்கிறது. பஜாஜ் ஆட்டோவின் இருசக்கர வாகன விற்பனை தொடர்ந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியில் தமிழகம் 37 சதவீத இடத்தை வகிக்கிறது.
எனவே, தமிழக சந்தைக்கு பஜாஜ் ஆட்டோ முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிஸ்கவர் 125 சிசி பைக்கை முதல்கட்டமாக தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது பஜாஜ் ஆட்டோ.
தற்போதுள்ள 150 சிசி டிஸ்கவர் மற்றும் 100 சிசி டிஸ்கவர் பைக்குகளுக்கு இடைபட்ட ரகமாக வந்துள்ள இந்த டிஸ்கவர் பைக்குக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைக்கும் என பஜாஜ் ஆட்டோ பெரிதும் நம்புகிறது. இதற்கு தக்கவாறு, தமிழகத்தில் டிஸ்கவர் 125 சிசி பைக்குக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக சாலைகளில் அதிக அளவில் டிஸ்கவர் 125 சிசி பைக்குகளை காண முடிகிறது. மேலும், தமிழகத்தை போன்று கர்நாடகா மற்றும் கேரளாவிலும் டிஸ்கவர் 125 சிசி பைக்கை முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள் விற்பனைப் பிரிவு மண்டல மேலாளர் கூறியதாவது:
"கடந்த நிதியாண்டில் 1.2 லட்சம் டிஸ்கவர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. நடப்பு நிதியாண்டில் 1.5 லட்சம் டிஸ்கவர் பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த நிதியாண்டில் கூடுதலாக 30,000 பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்த இலக்கை எட்டுவதற்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஸ்கவர் 125 சிசி பைக் கைகொடுக்கும். நடப்பு நிதியாண்டில் 20,000 டிஸ்கவர் 125 சிசி பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தை தொடர்ந்து மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் இந்த பைக்கை அறிமுகம் செய்ய உள்ளோம்," என்றார்.