ஒரு வாரம் மே தினத்தைக் கொண்டாடுங்கள்-தேமுதிகவினருக்கு விஜயகாந்த் அழைப்பு
சென்னை: தேமுதிகவினர், மாவட்ட ஆட்சித் தலைவர்களின் உரிய அனுமதியைப் பெற்று ஒரு வார காலத்திற்கு மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"எல்லோரும் உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பை சுரண்டி வாழக் கூடாது என்ற உயர்ந்த குறிக்கோளுக்கு அடிக்கல் நாட்டிய நாள்தான் மே தினமாகும். உழைப்பாளிகளை முதலாளிகள் அடிமைகளாக நடத்தியதற்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்தான் மே தினநாள்.
உழைப்பவர்களும் உரிமை உடையவர்கள் என்பதை நிலைநாட்ட உயிரையே பணயம் வைத்த வரலாறு மே தினத்திற்கு உண்டு.
எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம் என்ற தொழிலாளி வர்க்கத்தின் உன்னத முழக்கத்தை உலகுக்கு உணர்த்திய நாள்தான் பாட்டாளி வர்க்கத்தினர் கொண்டாடி வரும் மே தினமாகும்.
உழைப்புக்கு உயர்வு தேடும் இந்த நன்னாளை தேமுதிகவும், அதனைச் சார்ந்த தொழிற்சங்கப் பேரவையும் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு தேர்தல் காலம் ஆதலால், மே தின விழாவை கொண்டாட நமது இயக்கத் தோழர்கள் அரசாங்க அதிகாரிகளை அணுகி முறையான அனுமதி பெற்று கொண்டாட வேண்டும்.
மே தினத்தன்று கொடியேற்றம், ஊர்வலம், பொதுக் கூட்டம் போன்றவை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தேர்தல் கமிஷனால் ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நமது தோழர்கள் எந்தெந்த பகுதியில் எத்தகைய விழாக்களை எடுக்க வேண்டுமோ, அதற்கான அனுமதியை முன்கூட்டியே முறையாக அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற்று நடத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
மே மாதம் முதல் தேதியில் இருந்து 8-ம் தேதி வரை மே தின விழாவை கொண்டாடும்படியும், அனைத்து கழக, தொழிற்சங்கப் பேரவை மற்றும் அணி நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து பெருமளவில் பொது மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பாக கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.