சாய் அறக்கட்டளை செயல்பாட்டை கண்காணிக்கும் ஆந்திர அரசு?
புட்டபர்த்தி: சாய் அறக்கட்டளையின் செயல்பாடுகளை சிறிது காலம் எந்தவித குறுக்கீடும் இன்றி கண்காணிப்பது என்று ஆந்திர அரசு தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று நடந்த ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இறுதிச் சடங்கில் ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், முதல்வர் என். கிரண்குமார் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சாய் அறக்கட்டளை நிர்வாகிகள் சிலரை அழைத்து பேசியுள்ளனர். அறக்கட்டளை சுமூகமாக நடக்கும்வரை ஆந்திர அரசு தலையிடாது. ஆனால் ஏதாவது நடைமுறைக்கு மாறாக நடந்தால் அதில் அரசு தலையிடும் என்று அவர்கள் இருவரும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் கொண்ட அறக்கட்டளையின் தலைமைப் பொறுப்பை ஏற்க அதன் உறுப்பினரான முன்னாள் நீதிபதி பி.என். பகவதி, ஆடிட்டர் இந்துலால் ஷா ஆகியோர் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
பாபாவின் தம்பி மகன் ரத்னாகர் தலைமை பொறுப்புக்கான பரிசீலனையில் முதலிடத்தில் உள்ளார். இந்த பரிசீலனையில் டிவிஎஸ் குழுமத்தி்ன் வேணு சீனிவாசனும் உள்ளார்.
தற்போதைக்கு செயலாளர் கே. சக்ரவர்த்தி அறக்கட்டளையை வழி நடத்துவார் என்றும், பாபாவின் 11-வது நாள் காரியங்களுக்குப் பிறகு கூடும் அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ராயலசீமா மண்டல காவல்துறை ஐஜி சந்தோஷ் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.
பாபாவின் குடும்பத்தாரோ, அறக்கட்டளை நிர்வாகிகளோ பாதுகாப்பு கோரவில்லை என்றாலும் பொதுவான காரணங்களுக்காக பாதுகாப்பு அவசியமாகிறது என்று அவர் தெரிவித்தார்.