For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கும் என் நம்புகிறேன்-கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு இறுதித் தீர்ப்பை அறிவிக்கும் என்று நம்புவதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.

அவரது பேட்டி விவரம்:

கேள்வி: பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது. அந்த வழக்கில் பல வாய்தாக்கள் தாண்டி கடைசியாக மே 15ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர், அடுத்த விசாரணைக்குள் அதிமுக ஆட்சி வந்து விடும் என்றும், அப்போது இந்த வழக்கை வாபஸ் வாங்கி விடுவோம் என்றும் சொல்லியிருக்கிறாரே?.

பதில்: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெறுவதாகும். உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்றால் வேறு ஒரு மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை அங்கே நடைபெற வேண்டும் என்பது தான். அந்த வழக்கு தான் தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலே நடக்கிறது.

அந்த வழக்கினைத் தான் வாய்தா வாங்கியே தாமதித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த நீதிமன்றத்திலே ஏதாவது ஒரு மனுவைத் தாக்கல் செய்து அதற்கு அந்த நீதிமன்றம் அனுமதி கொடுக்க மறுத்து விட்டால் உடனே கர்நாடக மாநிலத்திலே உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அங்கே மேல்முறையீடு செய்து, சிறப்பு நீதிமன்ற ஆணைக்குத் தடை வாங்குகிறார்கள். இப்படி இழுத்துக் கொண்டே போய் இறுதியாக உச்ச நீதிமன்றத்திற்கு இதன் முடிவு செல்லும் போது, எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் இதிலே ஒரு இறுதித் தீர்ப்பை அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: 2ஜி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?

பதில்: இதைப்பற்றி நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

கேள்வி: இது திமு கழகத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?

பதில்: தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட சங்கடம் எங்களுக்கு ஏற்படாது. அது என்ன சங்கடம் என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை.

கேள்வி: ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தீர்மானத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. எந்தெந்த ஊடகங்கள்?

பதில்: ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பத்திரிகைகளைப் படிப்பவர்களுக்கும், மாலை அல்லது இரவு நேரங்களில் தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்களுக்கும் எந்தெந்த ஊடகங்கள் என்பது தெரியும்.

கேள்வி: கனிமொழி முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்திற்கு செல்வாரா?

பதில்: அதெல்லாம் சட்டப்படி அணுகப்படும். அப்போது உங்களுக்குத் தெரியும். இந்த வழக்கில் ஈடுபடக் கூடிய வழக்கறிஞர்கள் எடுக்க வேண்டிய முடிவு அது.

கேள்வி: அடுத்த மாதம் 6ம் தேதியன்று கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று சொல்லியிருக்கிறபடி, அவர் ஆஜராவாரா?

பதில்: எத்தனையோ பேர் பலமுறை நீதிமன்றம் சொல்கிறபடி நேரில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்களே, அதைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?

கேள்வி: போபர்ஸ் ஊழல் வழக்கில் மட்டும் சி.பி.ஐ. சரியாக நடவடிக்கை எடுக்கவில்லையே?

பதில்: அந்தப் பழைய விவரங்களைப் பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை.

கேள்வி: 87 வயதான திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நீங்கள். கட்சி நிர்வாகத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் பெரிய தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களை சில ஏடுகளும், சில சதிகளும் சேர்ந்து தலைமைப் பொறுப்பிலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: இயற்கை ஒன்றால் தான் என்னை அகற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

English summary
The ruling Dravida Munnetra Kazhagam (DMK) in Tamil Nadu today decided it would take legal action to establish the truth in the telecom spectrum allocation scam in which Kanimozhi, the party’s Rajya Sabha member and daughter of Chief Minister and party president M Karunanidhi, has been named co-conspirator.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X