கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம்(28), கேட்(29) திருமணம் இன்று நடந்தது.
இந்தத் திருமணம் புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்தது. முதலில் மணமகன் வில்லியம் வந்திறங்கினார். அடுத்து அவரது தந்தை சார்லஸும், கெமிலாவும் வந்தனர். பின்னர் ராணி எலிசபெத், தனது கணவர் பிலிப்புடன் வந்தார்.
எங்கே கேட் என்று கண்கள் தேட, சரியாக 11 மணிக்கு தேவாலயத்தில் அழகாக வந்திறங்கினார் மணமகள் கேட். கேட்டை பார்த்தவுடன் வழியிருந்தவர்களும் சரி, ஆலயத்தில் கூடியிருந்தவர்களும் மகிழ்ச்சி கரகஷோம் எழுப்பினர்.
ராணி எலிசபெத்தின் ரோல்ஸ ராய்ஸ் காரில் வந்தார் கேட். வழி நெடுகிலும் நின்ற மக்களுக்கு கையசைத்தவாறே வந்தார்.
பின்னர் வில்லியம், கேட் திருமணம் புராடஸ்டன்ட் முறைப்படி நடந்தது. மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டு புதிய பந்தத்தில் இணைந்தனர். இந்த நூற்றாண்டின் பிரபலமான திருமணமாக இது கருதப்படுகிறது.
திருமணத்தைக் காண ஏராளமான வெளிநாட்டவரும், பத்திரிக்கையாளர்களும் லண்டனில் குவிந்தனர்.
ராஜ திருமணத்தை முன்னிட்டு லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த திருமணம் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் மற்றும் யூ டியூபில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
லண்டனில் உள்ள பிரபல தேவாலயமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு) திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
ஸ்கை நியூஸ், பிபிசி, குளோபல் நியூஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டன் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்த ராஜ திருமணத்தை காண சுமார் 6 லட்சம் பேர் கூடுதலாக லண்டனுக்கு வந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருமணத்தின் போது கேட் மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட 'ஹேர் பின்னை' இலங்கை சார்பில் அரசு நிறுவனமான ஸ்ரீலங்கா நவரத்தினம், நகைகள் அமைப்பு பரிசாக வழங்கியது. முன்னதாக 1981ம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்தது. அதன் பிறகு டயானாவுக்கு கொடுக்கப்பட்டது போன்ற நீலக்கல் மோதிரங்கள் விற்பனை சக்கைபோடு போட்டது. தற்போது மீண்டும் நீலக்கல் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த திருமணத்திற்கு உலக ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அழைக்கவில்லை.
இந்தத் திருமணத்தை 1,900 பேர் நேரடியாக கண்டு களித்தனர். மேலும், உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர்.
இதற்கிடையே திருமணத்திற்காக மக்களின் வரிப்பணம் தண்ணீராக செலவளிக்கப்படுவதாக இங்கிலாந்தின் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
திருமணத்தின்போது டுவிட்டருக்கு தடை:
இளவரசர் வில்லியம், கேட் திருமணம் நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டது. தேவாலயத்தில் டுவிட்டரை பிளாக் செய்யும் கருவி பொருத்தப்படுகிறது. ராஜ குடும்பத்தார் தான் இந்த ஏற்பாட்டை செய்யுமாறு கூறியதாகவும், அதற்கு பாதுகாவலர்கள் ஒப்புதல் அளி்த்துள்ளதாகவும் யாஹூ தெரிவித்துள்ளது.
இதை ஒரு போலீஸ் அதிகாரியும் உறுதிபடுத்தியுள்ளார். தேவாலயத்தில் திருமணம் நடக்கையில் செல்போன்கள் ஒலிக்காமல் இருக்க ஜாமர்களும் பொருத்தப்படிருந்தன.