இன்போஸிஸ் புதிய தலைவர் யார்... இன்று தெரியும்!!
பெங்களூர்: நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போஸிஸின் புதிய தலைவர் யார் என்பதை இன்று அறிவிக்கிறது அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு.
இன்போஸிஸ் நிறுவனத்தின் தலைவராக, அதன் நிறுவனர் என்ஆர் நாராயணமூர்த்தி இருந்து வருகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் அவர் இந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இன்போஸிஸ் நிறுவனத்தை கூட்டாக ஆரம்பித்திருந்தாலும், அதனை ஒரு வர்த்தக சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியவர் என்ற பெருமை நாராயணமூர்த்திக்கு உண்டு.
இப்போது அவர் தனது ஓய்வுக்குப் பிறகு பதவி நீட்டிப்பை பெற மறுத்துவிட்டதோடு, புதிய தலைவரைத் தேடுமாறு கடந்த ஆண்டே அறிவித்துவிட்டார். இன்போஸிஸ் குடும்பத்துக்கு வெளியிலிருந்தே இந்த புதிய தலைவர் வரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரது இந்த முடிவு குறித்து கருத்து கூறிய இன்போஸிஸ் இணை நிறுவனர் டிவி மோகன்தாஸ் பய், 'வால்ட் டிஸ்னி மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிலையை நினைத்துப் பார்த்து, அத்தகைய சூழலை தவிர்க்க இன்போஸிஸ் முனைய வேண்டும்" என்றார்.
வால்ட் டிஸ்னி இறந்த பிறகு, பொழுதுபோக்குத் துறையில் டாப் இடத்தில் இருந்த டிஸ்னி நிறுவனம் சடசடவென சரியத் துவங்கியது நினைவிருக்கலாம்.
ஏற்கெனவே இன்போஸிஸ் நிறுவனர்கள் நந்தன் நிலகேனி, மோகன்தாஸ் பய், கே தினேஷ் ஆகியோர் விலகியுள்ள நிலையில் இப்போது, நாராயண மூர்த்தியும் ஓய்வு பெறுகிறார்.
நாராயணமூர்த்திக்குப் பிறகு யார் அந்தப் பொறுப்புக்கு வருவார்கள் என பலவேறு கட்டுரைகள் வெளியாகியவண்ணம் உள்ளன.
கே வி காமத்?
இன்போஸிஸ் இயக்குநர்களில் ஒருவரும் ஐசிஐசிஐ வங்கியின் தலைவருமான கே வி காமத் புதிய தலைவராகவும் இப்போதைய இன்போஸிஸ் சிஇஓ கோபாலகிருஷ்ணன் துணைத் தலைவராகவும் வரக்கூடும் என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
கோபாலகிருஷ்ணன்
இன்னும் ஒரு தரப்பு, கோபாலகிருஷ்ணன்தான் தலைவராக வாய்ப்புள்ளதாகக் கூறிவருகின்றனர். இயக்குநர்களில் ஒருவரும் அபார நிர்வாகி எனப் பெயர் பெற்றவருமான எஸ்டி ஷிபுலால் சிஇஓவாக வருவார் என்பது இவர்கள் கணிப்பு.
எஸ்டி ஷிபுலால்
ஆனால் யாரும் எதிர்ப்பாராத வகையில் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு எஸ்டி ஷிபுபலால் தேர்வாகவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்போஸிஸ் நிறுவனர்களிலஸ் ஷிபு லாலும் ஒருவர். இப்போது இன்போஸிஸ் சிஓஓ அவர்தான்.