மே தினம்-தொழிலாளர்களுக்கு கருணாநிதி, ஜெ. வாழ்த்து
இன்று உலகெங்கும் மே தினம் எனப்படும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை, அதற்கேற்ற ஊதியம் போன்றவற்றைச் சட்டப்பூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்தது இந்த நாள்தான்.
தொழிலாளர்களுக்கு தடையின்றி 20 சதவீத போனஸ், ஊக்கத் தொகை, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் உள்பட ஏராளமான நலத் திட்டங்களை வழங்கி நாளும் உழைத்திடும் ஏழை, எளிய தொழிலாளர் குடும்பங்கள் வளம் பெற வேண்டும் என இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கு மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
இந்த மே தின நாளில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்; உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொண்டு தினக்கூலி பணியாளர்கள் ஒப்பந்தக் கூலி பணியாளர்கள் உள்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் உரிய பயன்களை அடையக் கூடிய சூழ்நிலைகள் உருவாக பாடுபட வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்து தொழிலாளர்கள் வாழ்வில் நலமும் வளமும் கொழிக்கட்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தியில்,
உலகம் 126-வது மே தினவிழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. முதலாளித்துவம் தன்னைக் காத்துக்கொள்ள உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் நடைபெறும் மே தின விழா, தொழிலாளி வர்க்கத்துக்கு எழுச்சியூட்டக் கூடியதாக இருக்கட்டும்.
இந்தப் பின்னணியில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அரசு தமிழக தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளைச் செவிமடுக்க வேண்டும். தமிழகத்தில் விவசாயம், தொழில்களைப் பாதுகாக்க புதிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் வரவேற்போம். அன்னிய மூலதனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் அவலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க இந்த மே தினத்தில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில்,
உழைக்கும் மக்களின் உரிமை முழக்கம் எழுப்பும் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மே நன்னாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துகள். கடந்த ஆண்டில் பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்காக இந்தியத் தொழிலாளரி வர்க்கம் பல போராட்டங்களை நடத்தியது.
கடந்த 5 ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என்ற பெயரால் வழங்கப்பட்ட ஐந்து லட்சம் கோடியும் ஊழலால் இழந்த பல்லாயிரம் கோடியும் இந்திய மக்களை ஏழ்மைக்குள் தள்ளியிருப்பதையும் எதிர்த்துப் போராட இந்த மே தினத்தில் உறுதி ஏற்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.