களத்தில் காத்திருக்கும் நெல் - வேதனையில் விவசாயிகள்
தாராபுரம்: அறுவடை செய்யப்பட்ட 24,000 டன் நெல்லை கொள்முதல் செய்ய ஆட்கள் இல்லாததால் கலக்கத்தில் உள்ளனர் தாராபுரம் வட்டார விவசாயிகள்.
அமராவதி பாசனம்
தாராபுரம் வட்டாரம் அமராவதி பழைய பாசனத்தின் கீழ் சுமார் 25 கிராமங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 100கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லுக்கு கொள்முதல் விலை ரூ.1,200/- என நிர்ணயம் செய்தது அரசு. தனியார் நெல் விதை உற்பத்தியாளர்கள், அரிசி ஆலை அதிபர்கள் நேரடியாக வயல்வெளிக்கே சென்று அதை விட கூடுதலாக மூட்டைக்கு ரூ.1,250/- என கொள்முதல் செய்து வந்தனர்.
போக்குவரத்துச் செலவுகள் இல்லை, கூடுதல் விலை, உடனடி பணம் போன்ற காரணங்களுக்காக விவசாயிகளும் தங்களது உற்பத்தியில் 95% க்கும் மேல் தனியார்களுக்கே விற்று வந்தனர்.
தேர்தல் வாக்குறுதி
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் அரிசி இலவசமாக வழங்கபடும் என்று அறிவித்திருந்தன. இதனால், அரிசிக்கு பெரிய விலை கிடைக்க வாய்ப்புகள் குறை என்பதால் தனியார் அரிசி ஆலை அதிபர்கள் நெல் கொள்முதலில் ஆர்வம் செலுத்தவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வேளாண் அதிகாரிகளும் நெல் கொள் முதல் செய்ய முடியாது.
காத்திருக்கும் நெல்
தற்போது ஏக்கருக்கு 2,400 கிலோ வீதம் 24 ஆயிரம் டன் எடையுள்ள நெல் அறுவடை செய்யப்பட்டு களத்து மேட்டில் காய்ந்து வருகிறது. 'ஏற்கனவே தாராபுரம் பகுதியில் விவசாயம் வெகு வேகமாக அழிந்து வருகிறது. இந்நிலையில் சொற்ப விவசாயிகளே நெல் பயிரிடுவதில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கும் உழவர்களின் உழைப்பு இப்படி வெயிலில் வாடுவது அவர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது" என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் (திருப்பூர்) தலைவர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் கோரிக்கை
இந்தப் பிரச்சனையில் அரசு உடனே தலையிட்டு தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, உடனடியாக நெல் கொள்முதலை துவங்க வேண்டும் என்பதே தாராபுரம் விவசாயிகளின் கோரிக்கை. ஏற்கனவே, உணவுப் பற்றாக்குறை இருக்கும் தேசத்தில் விளைபொருட்கள் இப்படி களத்து மேட்டிலேயே காத்திருப்பது வேதனை.