பின்லேடனுக்கு பாக்.கில் பலர் உதவியுள்ளனர்-அமெரிக்கா
வாஷிங்டன்: பின்லேடனுக்கு பாகிஸ்தானில் யாருடைய ஆதரவும் இல்லை என்று கூறுவதை நம்ப முடியாது. அவருக்கு உள்ளூரில் ஆதரவு இருந்தது. அப்படி இருந்திருக்காவிட்டால் இத்தனை காலம் அவர் அங்கு பாதுகாப்பாக இருந்திருக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பிரன்னன் கூறுகையில்,
ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தானில் எந்த ஆதரவும் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது, நம்ப முடியாது. நிச்சயமாக அவருக்கு பாகிஸ்தானில் பலர் ஆதரவாக இருந்திருக்க வேண்டும். இதுகுறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம்.
உள்ளூரில் ஆதரவு இல்லாமல் ஒருவரால் நிச்சயம் அங்கு பத்திரமாக இருந்திருக்க முடியாது. அதுவும் பின்லேடன் போன்றவர்களால் நிச்சயம் இருக்க முடியாது. எனவே பாகிஸ்தானில் அவருக்கு பலமான ஆதரவு அமைப்பு இருந்திருக்கும்.
அது எந்த மாதிரியான ஆதரவு, யார் யார் அவருக்கு ஆதரவு அளித்திருக்கலாம் என்பது குறித்து நான் யூகமாக எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் பின்னரே யார் அந்த ஆதரவு பலம் என்பது தெரிய வரும்.
தற்போது பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நாங்கள் பல விஷயங்கள் குறித்துப் பேசி வருகிறோம். இன்னும் என்னவெல்லாம் எங்களுக்கு சாதகமாக உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
பாகிஸ்தான் ஒரு பெரிய நாடு. அப்படிப்பட்ட நாட்டில் ஒருவர் பதுங்கி இருப்பது என்பது பெரிய விஷயமில்லை. ஆனால் ராணுவ அகாடமிக்கு அருகில், ஏராளமான முன்னாள் ராணுவ அதிகாரிகள் வசித்து வரும் ஒரு முக்கியமான பகுதியில் இத்தனை காலமாக ஒருவர், அதிலும் உலகமே தேடி வரும் ஒரு முக்கிய நபர் பதுங்கியிருப்பது என்பது சாமானியமல்ல. அதுதான் எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிச்சயம் ஒரு மாபெரும் ஆதரவு இல்லாமல் பின்லேடனால் இந்தப் பகுதியில் இத்தனை காலம் தங்கியிருந்திருக்க முடியாது.
பாகிஸ்தானுடன் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறோம். இனியும் தொடர்ந்து செயல்படுவோம்.
பின்லேடனை உயிருடன் பிடிக்கவே அமெரிக்கப் படையினர் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்ததால் சுட நேரிட்டு விட்டது.
சரணடையோ அல்லது பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தாலோ நிச்சயம் பின்லேடனை உயிருடன் பிடித்திருப்போம்.
மேலும் எங்களது வீரர்களுக்கு எதுவும் ஆகக் கூடாது என்று அதிபர் ஒபாமா திட்டவட்டமாக கூறியிருந்தார். அமெரிக்க வீரர்களின் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார். இதுவும் பின்லேடன் நடவடிக்கையை துரிதமாக நாங்கள் மேற்கொள்ள நேரிட்டதற்கு ஒரு காரணம்.
பின்லேடனுக்கு கடலில் சமாதி கட்டியது பொருத்தமான ஒன்றுதான். இஸ்லாமிய முறைப்படிதான் அவரது உடலை நாங்கள் அடக்கம் செய்தோம் என்றார் பிரன்னன்.