தீவிரவாத செயல்களை பாக். உடனடியாக நிறுத்த வேண்டும்-பிரதமர்
டெல்லி: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கை. பாகிஸ்தான் தனது மண்ணை தீவிரவாதிகளின் வேட்டைக் காடாக மாற்றியிருப்பதை உடனடியாக களைய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பின்லேடன் கொலை குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கை. சர்வதேச சமுதாயம், குறிப்பாக பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியுடன் எடுக்க முன்வர வேண்டும்.
அல்கொய்தாவுக்கும், பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் இது மரண அடியாக அமையும் என நம்புகிறேன்.
பாகிஸ்தான் அரசு தனது மண்ணிலிருந்தபடி செயல்படும் அனைத்துத் தீவிரவாதக் குழுக்களையும் அழிக்க வேண்டும். தீவிரவாதத்தை தனது நாட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்ற தீவிரவாதக் குழுக்களுக்கு யாரும் இடம் தரக் கூடாது என்றார் பிரதமர்.