புதுச்சேரி ஆளுநரை மாற்றக்கோரி மே 7 முதல் 9 வரை சிபிஎம் போராட்டம்
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி செயலாளர் வி. பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கருப்புப் பண மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்ததற்கும், தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜுகேஷனல் அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கும் புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
இந்த மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு ஆவணத்தை திருத்திய குற்றத்திற்கு தலைமை செயலாளர் சந்திரமோகன் உறு துணையாக இருந்துள்ளார்.
எனவே, இந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து மத்திய உள்துறை விசாரணை நடத்த வேண்டும். பல்வேறு குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ஆளுநரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளோம்.
மேலும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மாநிலம் முழுதும் கருப்பு பேட்ஜ் அணிந்து பொது மக்களை சந்தித்து கையெழுத்து வாங்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
கவர்னர் பஞ்சாப் பயணம்:
இந்த விவகாரத்தில் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படும் இக்பால் சிங் தனது சொந்த மாநிலமான பஞ்சாப் சென்றுள்ளார்.