மின்வாரிய தலைவருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: கோவையில் நாளை போராட்டம்
கோவை: கோவையில் மின்வாரிய தலைவருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
தொடரும் மின் வெட்டை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் மே 5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தன. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவு பெருகியது. கோவையில் பிடித்த இந்த நெருப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. கோவையில் போராட்டம் நடைபெறும் அதே நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தை
இந்நிலையில் கோவையிலுள்ள தொழில் அமைப்புகளை சமாதானப்படுத்தி, போராட்டத்தை வாபஸ் பெறும் முயற்சியில் மின்வாரியத் தலைவர் சி.பி. சிங் கோவை வந்தார். தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை துவங்கியது. கலெக்டர் உமாநாத், வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம், தலைமைப் பொறியாளர் தங்கவேலு ஆகியோர் உடனிருந்தனர்.
தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா கந்தசாமி, காட்மா ரவிக்குமார், சேம்பர் ஆஃப் காமர்ஸ் கிருஷ்ணன், மின் நுகர்வோர் சங்கம் இளங்கோ, விவசாயிகள் சங்கம் தனபால் உள்ளிட்ட 24 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது.
தோல்வி
தொழில் அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட ஏழு கோரிக்கைகளில் எதையும் நிறைவேற்றுவதாக மின்வாரியம் உறுதி அளிக்கவில்லை. மின் தடையை சமமாகப் பகிர வேண்டும் என்பதையும் சி.பி.சிங் ஏற்கவில்லை என்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
திட்டமிட்டபடி போராட்டம்
விரைவில் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறுகிறார்களே தவிர, மின் தடையால் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகளை மின் வாரியம் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை எனவே திட்டமிட்டபடி மாபெரும் போராட்டம் நடைபெறும் என கொடிசியா தலைவர் கந்தசாமி கூறினார்.