ஒசாமாவை உயிருடன் பிடித்த பிறகே கொன்றனர்: 12 வயது மகள் தகவல்
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டுக் கொன்றன. இந்நிலையில் ஒசாமாவின் மகள் சாபியா கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டுக்குள் புகுந்து அறை, அறையாக சோதனையிட்ட அமெரிக்கப் படைகள் 3வது மாடியில் ஒரு அறையில் இருந்த பின்லேடனை உயிருடன் பிடித்து கூட்டி வந்ததாகவும், அவரை ஹெலிகாப்டரில் ஏற்றும் முன் சுட்டுக் கொன்றதாகவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.
அதே போல ஒசாமாவின் 20 மகன் அம்சாவையும் சுட்டுக் கொன்ற அமெரிக்கப் படைகள் அவர்களது இரு உடல்களை மட்டும் ஹெலிகாப்டரில் கொண்டு சென்றதாகவும், அங்கு இறந்த கிடந்த மற்ற 4 பேரின் உடல்களை அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டதாகவு்ம் கூறியுள்ளார் சிறுமி.
ஒசாமா மீது தாக்குதல் நடத்தியபோது அந்த வீட்டிலிருந்த 3 ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் பலியாகியுள்ளனர். இந்தப் பெண் ஒசாமாவின் ஏமன் நாட்டு மனைவியாக இருக்கலாம் என்று அமெரிக்கப் படைகள் கூறின.
ஆனால், அந்தப் பெண் மனைவியல்ல என்றும், அவர் ஒசாமாவின் டாக்டராக இருக்கலாம் என்றும் இப்போது தெரியவந்துள்ளது. இவரும் ஏமனைச் சேர்ந்தவர் ஆவார்.
அதே நேரத்தில் அந்த வீட்டிலிருந்த 8 குழந்தைகள், இரு பெண்களை அமெரிக்கப் படைகள் உயிரோடு விட்டுவிட்டுப் போய்விட்டன. அதில் ஒரு பெண் தான் ஒசாமாவின் மனைவியான 29 வயது அமல் அஹமத் அல் சதா. இவர் 11 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஒசாமாவை மணந்தவர். இவர் ஒசாமாவின் 5வது மனைவியாவார். இவரது காலில் குண்டு பாய்ந்துள்ளதில் காயமடைந்துள்ளார்.
இவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும், 8 குழந்தைகளில் சிலருக்கும் கையில் பிளாஸ்டிக் விலங்குகளைப் போட்டு ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அமெரிக்கப் படைகள் சென்றுவிட்டன. தாக்குதலுக்குப் பின் அங்கு வந்த பாகிஸ்தானிய போலீசார் இவர்களை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.
அவர்களிடம் ஐஎஸ்ஐ விசாரணை நடத்தி வருகிறது. இவர்களை உரிய நாட்டிடம் ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், செளதி அரேபிய அரச குடும்பத்தை எதிர்த்ததால் பின்லேடனின் குடியுரிமையை அந்த நாடு ரத்து செய்துவிட்டது. இதனால் அவரது குடும்பம் அந்த நாட்டுக்குள் செல்ல முடியாது. இவர்களை ஏமன் ஏற்குமா என்பதும் தெரியவில்லை.
பிடிபட்ட 8 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வயது 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 8 குழந்தைகளில் இரு சிறுவர்கள் பின்லேடனின் குழந்தைகள் என்று தெரிகிறது. மற்றவர்கள், அவருடன் அந்த வீட்டில் வசித்த இரு சகோதரர்களின் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. அந்த இரு சகோதரர்களும் ஒரு பாதுகாவலரும் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.
முதலில் இந்த வீட்டில் உயிரோடு பிடிபட்ட அனைவரையுமே அமெரிக்கப் படைகள் தங்களுடன் கொண்டு செல்ல முயன்றதாகவும், ஆனால் ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அந்த வீட்டின் காம்பவுண்டில் விழுந்துவிட்டதால், அதை அங்கேயே விட்டுவிட்டதால், இடப் பற்றாக்குறையால் 10 பேரை விட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
இதனால் ஒசாமா மற்றும் அவரது மகனின் உடல்களை மட்டும் கொண்டு சென்றுள்ளனர்.
கொல்லப்பட்ட மற்ற 4 பேரில் அபு அஹமத் அல்-குவைதி என்பவர் தான் பின்லேடனின் கடிதப் போக்குவரத்தைக் கையாண்டு வந்தவர். இவரை கண்காணித்ததன் மூலமாகத் தான் பின்லேடனின் இருப்பிடத்தை சிஐஏ அறிந்தது.
இந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன் அமெரிக்கப் படைகள் கிரணைட் குண்டுகளை வீசித் தாக்கியதில், அங்கிருந்த குழந்தைகள் உள்பட அனைவருமே காயமடைந்துள்ளனர்.