இடம் பெயரும் சாயப் பட்டறைகள்: பரிதவிக்கும் திருப்பூர்
உயர் நீதிமன்ற உத்தரவு:
உயர் நீதிமன்ற உத்தரவினால் திருப்பூர் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதால் பெருந்துறை, ஈரோடு, பவானி, பள்ளிப்பாளையம், நாமக்கல், சேலம் பகுதிகளில் இயங்கி வந்த சாயப் பட்டறைகளில் கிராக்கி அதிகமானது. ஆர்டர்களை முடித்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் உற்பத்தியாளர்களும் வேறு வழியின்றி அவர்களை நாடினர். இதனால் கூலியும் 30 சதவீதம் உயர்ந்தது.
பெரிய அளவில் தொழில் செய்யும் உற்பத்தியாளர்களோ லூதியானா, கொல்கத்தா, டெல்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று சாயமிடுகிறார்கள்.
இடம்பெயரும் இயந்திரங்கள்:
இந்நிலையில் வெளிமாவட்டங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நெருக்கடி இல்லாத காரணத்தால், திருப்பூரில் சாயப் பட்டறைகள் வைத்திருந்த பலரும் இயந்திரங்களுடன் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல துவங்கியுள்ளனர். மதுரை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கம்பம், கடலூர் ஆகிய நகரங்களை இவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கோரிக்கை:
கழிவு நீர் பிரச்சனையில் அரசு தலையிட்டு உறுதியளிக்கும் பட்சத்தில் திருப்பூரில் சாயப் பட்டறைகள் தொடர்ந்து இயங்க நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளிக்கும். பிறகு, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு செய்து விடலாம் என்கின்றனர் சாயப் பட்டறை உரிமையாளர்கள்.