ஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய 'ஸ்டெல்த்' ஹெலிகாப்டர்கள்
ரேடார்களில் இருந்து தப்புவதற்காக விஷேச வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பிய படையினர், அதை குண்டு வீசி அழித்துள்ளனர். ஆனால், அந்த ஹெலிகாப்டர்கள் முழுமையாக சிதையவில்லை.
வால் பகுதி மட்டுமே சிதறியுள்ளது. இதனால் அந்த ஹெலிகாப்டர் முழு அளவிலேயே அப்படியே கிடந்தது. இதை பாகிஸ்தானிய படையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர். அதை அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்கக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ரேடார்களில் இருந்து தப்ப அந்த ஹெலிகாப்டரின் முனைகளை மேலும் கூர்மையாக்கியுள்ள அமெரிக்கா, அதன் சத்தத்தைக் குறைக்க இறக்கைகளை மேலும் சிறிதாக்கியுள்ளது.
முன்னதாக இந்தத் தாக்குதலுக்கு 4 பிளாக்ஹாக் (Blackhawk) ரக ஹெலிகாப்டர்களே பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. ஆனால், அங்கே விட்டுச் சென்ற ஹெலிகாப்டரை பார்த்தபோது, அது பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர் போலவே இல்லை.
கிட்டத்தட்ட F-117 ரக விமானத்தைப் போல காணப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர்கள், பாகிஸ்தானின் ரேடார்களில் மண்ணைத் தூவிவிட்டு அந்த நாட்டுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளன.
இந்த ஹெலிகாப்டர்கள், அபோடாபாத்துக்கு வந்து தங்கள் தலைக்கு மேலே பறக்கும் வரை எங்களுக்கு சத்தமே கேட்கவில்லை என்று பின்லேடனின் வீட்டுக்கு அருகில் வசிப்போர் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் வெற்றியடைய முக்கிய காரணமே இந்த ஹெலிகாப்டர்கள் என்று அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.