தப்பியோடிய 45 நாட்களில் 8 கொலை-9 கற்பழிப்பு: 'செக்ஸ் சைகோ' ஜெய்சங்கரின் பயங்கரம்
சேலம் மாவட்டம் எடப்பாடி கோணசமுத்திரத்தை சேர்ந்த ஜெயசங்கர் (33) பெண் போலீஸ் ஜெயமணி உள்பட ஏராளமான பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளான். ஜெயமணியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவன் வழக்கு விசாரணைக்காக மார்ச் 16ம் தேதி தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அவனை கோவை ஆயுதப்படை போலீசார் சின்னசாமி, ராஜவேல் ஆகியோர் தர்மபுரி அழைத்துச் சென்றுவிட்டு கோவை சிறைக்கு திரும்ப சேலம் பஸ் நிலைம் வந்தபோது ஜெயசங்கர் தப்பியோடி விட்டான். கைதி தப்பியதால் போலீஸ்காரர் சின்னச்சாமி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 6 பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர். இதை ஜெய்சங்கர் தான் செய்திருப்பான் என்று சந்தேம் எழுந்ததால் தமிழக போலீசார் கர்நாடக போலீசாரை எச்சரித்தனர். இதையடுத்து இரு மாநில போலீசாரும் இவனைத் தேட ஆரம்பித்தனர்.
இந் நிலையில் கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் எளகி என்ற ஊரில் ஒரு பெண்ணை அவன் கற்பழிக்க முயன்றபோது அந்த பகுதி மக்கள் ஜெய்சங்கரை பிடித்து ஜோல்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஜெய்சங்கர் பிடிபட்ட தகவல் கிடைத்ததும் கோவை தனிப்படை போலீசார் ஜோல்கி போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இரு மாநில போலீசாரும் அவனிடம் விசாரணை நடத்தியபோது அவன் கூறுகையில்,
நான் தமிழகத்தில் பெண் போலீஸ் ஜெயமணி உள்பட பல்வேறு பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளேன். 45 நாட்களுக்கு முன்பு சேலத்தில் போலீசாரிடம் இருந்து தப்பித்து லாரி மூலம் பீஜப்பூர் வந்தேன். எனது கையில் பணம் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை நிறுத்தினேன். அவரும் நின்றார். அவரை உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கி மயங்க வைத்து அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவானேன்.
அருகே காட்டு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு தோட்டத்தில் வீடு ஒன்று இருந்தது. வீட்டை நோட்டமிட்டபோது அங்கு கணவன்-மனைவி மட்டும் இருந்தனர்.
வீட்டுக்கு வெளியே கிடந்த அரிவாளுடன் உள்ளே நுழைந்து கணவனை ஒரே வெட்டில் கொன்றேன். அதனைப் பார்த்த அந்த பெண் கதறினாள். ரத்த கறையுடன் அவளை மிரட்டி கற்பழித்தேன். பின்னர் அவளையும் கொன்று விட்டு வீட்டில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பினேன்.
பின்னர் 1 வாரம் கையில் இருந்த பணத்தை வைத்து செலவு செய்தேன். பணம் செலவானதும் ஆடு மேய்த்து கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை தாக்கி கற்பழித்தேன். பின்னர் அவரை கொலை செய்து அவரிடம் இருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டேன்.
இப்படி பீஜப்பூர் பகுதியில் மட்டும் 5 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளேன். 3 ஆண்களையும் கொலை செய்துள்ளேன். இது போக 4 பெண்களை மிரட்டி கற்பழித்தேன். அவர்களை கொலை செய்யவில்லை.
கடைசியாக பிஜப்பூர் மாவட்டம் எளகி என்ற ஊரில் ஒரு வீட்டை நோட்டமிட்டேன். அப்போது அங்கு ஒரு பெண் மட்டும் தனியாக இருப்பதாக தெரிந்தது. அதனால் அவளை கற்பழிக்கும் நோக்கத்தில் உள்ளே சென்றேன். ஆனால் அங்கு 4 பேர் இருந்தனர்.
என்னை கண்டதும் அவர்கள் சத்தம் போட்டனர். உடனே தப்பி வெளியே ஓடி வந்தேன். அதற்குள் என்னை பொது மக்கள் மடக்கி பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளான்.
ஜெய்சங்கரின் மனைவி பரமேஸ்வரி இடைப்பாடி அருகே கன்னிப்பட்டி என்ற ஊரில் மகள் பிரேமதியுடன் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், என் கணவர் லாரி டிரைவராக இருந்தார். பின்னர் மினி பஸ், புறநகர் பஸ் ஓட்டினார். அப்போது தான் அவருக்கும் சங்ககிரியை சேர்ந்த போலீஸ்காரரின் மனைவி இந்திராணிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் இந்திராணி கொலை செய்யப்பட்டதில் என் கணவர் கைது செய்யப்பட்டார். அதையடுத்து வெளியில் வந்தவர் தொடர்ச்சியாக பல பெண்களை கற்பழித்து கொலை செய்ததாகக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர். அவரது செயல்களால் குடும்பமே அவமானத்தில் வெளியில் தலை காட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றார்.
ஜெய்சங்கர் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து, அதில் 19 பேரை கொலை செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.