ஒசாமாவுக்கு எதிரான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 'பெல்ஜியன் ஷெப்பர்டு' நாய்!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அபோடாபாத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரி அருகே வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லாடனை, அமெரிக்கக் கடற்படையின் அதிரடிப்படையினர் கடந்த ஞாயிறன்று இரவு சுட்டுக் கொன்றனர்.
79 பேர் கொண்ட இந்தப் படையினர் 4 ஹெலிகாப்டர்களி்ல் அங்கு சென்றபோது ராணுவ பயிற்சி பெற்ற Belgian Malinois ரக நாயையும் உடன் கொண்டு சென்றுள்ளனர்.
பின்லேடன் அருகே இருந்த மலைப் பகுதிக்குள் தப்பியோடினால் அவர் மீது தாக்குதல் நடத்த இந்த நாய் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மனிதர்களை விட பல மடங்கு வேகமாக ஓடக்கூடியவை இந்த வகை நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீட்டில் வெடிகுண்டுகள் இருந்தால் அதைக் கண்டுபிடிக்கவும் இந்த நாய் பயன்பட்டிருக்கும்.
ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் சீல்அதிரடிப்படையினர் இறங்கிய போது, அவர்களுடன் இந்த நாயும் இறக்கப்பட்டது.
இந் நிலையில் ஒசாமைவை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரை அதிபர் ஒபாமா நேற்று வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து விருது வழங்கியுள்ளார். ஆனால், அவர்களது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அதே போல இந்த நாயின் விவரமும் வெளியிடப்படவில்லை.
இந்த நாய் பெல்ஜியன் மாலினோய்ஸ் அல்லது ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக சீல் படையினரின் செயல்பாடுகளை அமெரிக்கா வெளியுலகுக்குத் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நம் ஊரில் வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்களுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது. அதை வழங்குவதற்காக பல கோடி செலவில், நடிகைகளின் நாட்டிய நிகழ்ச்சி எல்லாம் நடத்தினார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்ஐ தலைவர் திடீர் அமெரிக்கா பயணம்:
இந் நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அஹமத் சுஜா பாஷா திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பாகிஸ்தானுக்குள் வந்து அமெரிக்கா தாக்குதல் நடத்திவிட்டுச் சென்ற விவகாரத்தில் பாஷா பதவி விலகுவார் என்று கூறப்படும் நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.